நம்மவூர் கல்யாணமும், கல்யாண சாப்பாடும்!
நவம்பர் 2008
வாசிங்டன்
இன்னும் இரண்டு மாதங்களில் சகோதரர் திருமணத்திற்கு தமிழகம் செல்லவுள்ளேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் திருமணம், அதுவும் சகோதரருக்கு என்று நினைக்கும் பொழுது மனம் எல்லையில்லா ஆனந்தம் அடைகிறது. விமானப் பயணம் முழுவதும் அந்த திருமணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு போகலாம். நம்மவூர் ராம்ராஜ் வேட்டியும், நல்ல பளிச் நிற சட்டைக்கும் அல்லது நல்ல பால் போல வெள்ளை சட்டைக்கும் ஈடு இணை இல்லை! ரொம்ப நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை காதி கிராப்டில்கதரில் ஓர் ஜிப்பா எடுத்தேன், அதுப் போல் இப்பொழுது வருவது இல்லை! திரும்ப தேட வேண்டும்.
நம்மவூர் கல்யாணம் என்பது ஓர் தனி அழுகு! திருமண சம்மந்தம் முடிந்தவுடன் அது சம்மந்தமாக பேச்சுகள், அதனை ஒட்டி உறவினர்கள், நண்பர்களுடன் உரையாடல்கள், பத்திரிக்கைகள், சாப்பாடு விசயங்கள் என இன்னபிற விசயங்கள் அனைத்தும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே!
திருமணத்திற்கு முதல் நாள் மண்டபம் சென்று கொஞ்ச கொஞ்சமாக வேலைகள் ஆரம்பிப்பது ஓரு சுகம். அதுவும் திருமணத்திற்கு வேண்டிய அனைத்து மளிகைப் பொருள்கள் இறங்கியவுடன், அதனை நல்லப் படியாக ஓர் அறையில் வைத்து...அதற்கு எங்களிடம் ஓரு மாமா இருக்கிறார், அவர் அதனைப் பொறுப்பாக பார்த்துக் கொள்வார்.
சமையல் கலைஞர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள், அவர்கள் இறைவனை வணங்கிவிட்டு முதன் முதல் அடுப்பு எறிய சூடம் வைத்து தொடங்குவதை பார்த்ததும் ஓர் இனம் புரியாத பரவசம் மனதில் உண்டாகும். அடுத்து சமையல் கலைஞர்கள் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், உருளை, கேரட், முட்டை கோஸ், தக்காளி என கலர் கலராக காய்கறிகள் வெட்டி அதனை வைத்து இருக்கும் விதம் ஒர் தனி அழுகு! வயதான அம்மா பொறுமையாக பத்து பதினைந்து தேங்காய்களை துருவிக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது பாவமாக இருந்தாலும், இந்த வயதிலும் உழைப்பதைக் கண்டு பெருமையாக இருக்கும்! மேலும் சிலர் கடகடவென்று சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு ஒரே அளவில் தேய்த்து தயாராக வைத்திருப்பார்கள்! இன்னோரு பக்கம் ஒருவர் ஜாங்கிரியை லாவகமாக பிழிந்து கொண்டிருப்பார், மற்றோருவர் கோதுமை அல்வாவை கிண்டி கொண்டு இருப்பார். மொத்ததில் வேலைகள் ஜரூராக நடந்துக் கொண்டு இருக்கும்!
திருமணத்தில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் முதல் நாள் மண்டபதிற்கு ஒவ்வோரு நபராக வர ஆரம்பிக்க, வாசலருகே நின்று யார் வருகிறார்கள் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பது. அது ஓர் சுவையான அனுபவம்! அதிலும் ரொம்ப நாட்களாக நாம் சந்திக்காமல் இருந்த உறவினர்கள் வரும் பொழுது மிக மிக மகிழ்ச்சியாய் இருக்கும்! மாலை மாப்பிள்ளை அழைப்பு அல்லது நிச்சய தாம்பூலத்திற்கு சற்று முன்பு நாதஸ்வர இன்னிசையும், தவில் இசையும் கலந்து வரும் அந்த சுகமான இசை இருக்கிறதே ஆஹா என்ன வென்று சொல்வது எப்படி சொல்வது?
நமது வீட்டு கல்யாணத்தில் நான் மிகவும் ரசிப்பது மதியச் சாப்பாடு! இந்த மதிய சாப்பாடை நீங்கள் நன்கு சாப்பிட வேண்டுமென்றால் காலை உணவு சற்று குறைத்துச் சாப்பிட வேண்டும்! மதிய உணவைப் பற்றி சற்று விரிவாக இங்கு சொல்லப் பட ஆசைப் படுகிறேன்.
நல்ல பெரிய வாழை இலையில்
ஜாங்கிரி அல்லது கோதுமை அல்வா அல்லது பாதாம் அல்லவா
பருப்பு, நெய்
உருளை சிப்ஸ்
உருளைப் பட்டானி பொரியல்
பூசணிக்காய் கூட்டு
பீன்ஸ் கேரட் பொரியல்
வெண்டைக்காய் பக்கோடா வறுவல் அல்லது புடலங்கையாய் வறுவல்
கேரட் தயிர் பச்சடி
மசாலா வடை அல்லது மெதுவடை
மாங்காய் ஊறுகாய் அல்லது எலுமிச்சை ஊறுகாய்
முருங்கைகாய் சம்பார்
தக்காளி ரசம்
வத்த குழம்பு
கெட்டி தயிர்
மோர்
அப்பளம்
வாழைப் பழம்
பால் பாயசம்
இதனை பொறுமையாக நாம் ரசித்து, கூச்சப்படாமல் கேட்டு வாங்கி சாப்பாட வேண்டும். சாப்பிடும் பொழுது உங்களோடு சாப்பாடு ரசனை உள்ள நண்பர்கள் அல்லது உறவினர்களை உடன் சாப்பிட வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியம். சாப்பிட்டு விட்டு வெளியே வரும் பொழுது கும்பகோணம் வெத்திலை, ஏ ஆர் ஆர் சுண்ணாம்பு, நிஜாம் பாக்கு போட்டு அப்படியே மண்டபத்தில் ஓரமாக நிறைய சேர்களை இழுத்து போட்டு கொண்டு உறவினர்களோடும் நண்பர்களோடும் அரட்டை அடித்தால் அது சொர்க்கம்!
இதில் கொடுமையான விசயம் என்னெவென்றால் உறவினர்கள் ஓவ்வோருவாரக தம் தம் ஊருக்கு கிளம்ப ஆரம்பிப்பார்கள்.
என்ன செய்வது, பிரிவது என்பது மீண்டும் கூடத்தானே!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
3 Comments:
சகோதரர் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்:):):) மிக மிக அருமையானப் பதிவு:):):)ஆனா ஒன்னு, நங்கு நங்குன்னு என் தலையில் குட்டியிருக்கலாம், இப்டி நாக்கை ஊற வெச்சுட்டீங்களே:(:(:(
உங்கள் சகோதரருக்கு வாழ்த்துக்கள். ஊருக்குப்போகும்போது இந்த மாதிரி கல்யாணம் வந்தா தனி குஷிதான். உறவினர்கள் எல்லாரையும் ஒரே இடத்துல பாக்கலாம்.
Hello
Neenga mayavaramnu padithathum romba santhosham.Naan Thiruvilanthur.Padichathum anga than.Ippa in USA.
Post a Comment
<< Home