செம்மொழி மாநாட்டில் நானும்...
வாசிங்டன் ஜூலை 2010
கடந்த 10 தினங்களாக தமிழ் செம்மொழி மாநாட்டைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
இதற்கு முன் நான் உலகத் தமிழ் மாநாடு பார்த்தது இல்லை. இந்த செம்மொழி மாநாடு பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக திட்ட மிட்டு, வாசிங்டன்னில் இருந்து கோவை வந்தடைந்தேன். இந்த மாநாட்டில் நானும் ஒரு கட்டுரையாளன்!!!
கோவை மாநகரம் முழுக்க ஓரே விழா கோலம். மாநாட்டிற்கு ஒரு நாள் முன்பு வந்தது கோவையை நகர் வலம் வருவதற்காகதான். கோவை முழுக்க எங்கும் காவல்துறை அதிகாரிகள். வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இருக்கிறார்கள். இவர்களுக்கு கோவையை பற்றி நிறைய தெரியவில்லை. பொது மக்களை ஒழுங்கு படுத்தவே இவர்கள் அழைக்கப் பட்டு இருக்கிறார்கள்.
விழா முதல் நாள் செவ்வாய் மாலை மாநாட்டு பந்தலை மற்றும் உணவகத்தை பார்வை இட என் அமெரிக்காவாழ் தமிழ் நண்பர்களோடு சென்றோம். மாநாடு பந்தலுக்கு முன் கார் செல்ல அனுமதி இல்லை. மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். எங்கும் மக்கள் கூட்டம்! பொதுமக்கள், கொஞ்சம் கொஞ்சம் கட்சி காரர்கள் என்று பார்க்க முடிந்தது. பொதுமக்கள் உணவிற்காக உணவகம் மிக பிரமாண்டமாய் காட்சி அளித்தது. அனைத்து உணவக அரங்குகள் எளிய இனிமையான தமிழில் காட்சி அளித்தது.
தமிழ் மாநாடு பந்தலை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதியில்லை. மாநாட்டிற்கு முதல் நாளே ஆயிரக் கணக்கான மக்கள் உள்ளே வந்தவண்ணம் இருந்தார்கள்.
எல்லோரும் எதிர்பார்த்தபடி உலகத் தமிழ் மாநாடு புதன் காலை மிகச் சரியாக தொடங்கியது. போகும் வழியில் போக்குவரத்தில் மாட்டிக் கொண்டேன். இத்தனைக்கும் எனக்கு விஜபி அனுமதி கார் சீட்டு இருந்தும் காரை மாநாடு நடக்கும் இடத்திற்கு கொண்ட செல்ல முடியவில்லை. இந்தியாவின் குடியரசு தலைவர், மாநில ஆளுநர், முதல் அமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள் சென்றதால் மிக கடுமையான போக்குவரத்தில் மாட்டி கொண்டேன்.
விழா முதல் நாள் என்பதாலும், கடுமையான மக்கள் கூட்டம் இருந்ததாலும் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு என்று நல்ல இடத்தை காவல்துறை அதிகாரிகளால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் எனக்கும் என் தந்தைக்கும் நல்ல இடம் கிடைத்தது.
தினமும் பொது அரங்கில் கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும்.
ஆய்வரங்கங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை அனைத்து கட்டுரைகளும் வாசிக்கப் படும். இதில் முக்கியமான தலைப்புகள், மற்றும் முக்கியமான நபர்கள் பேசும் இடங்களில் கூட்டம் மிக மிக அதிகமாக இருந்தது.
முதல்நாள் ”கோவூர் கிழார்” என்ற அரங்கில் முனைவர் இறையன்பு “திருவள்ளூவரும் சேக்ஸ்பியரும்” பற்றி ஒரு கட்டுரை சமர்பித்து பேசினார். மிக அருமையான தலைப்பு. நிறைய திருக்குறளை சேக்ஸ்பியரோடு ஓப்பிட்டு பேசினார். அரங்கு நிறைந்த கூட்டம்.
தமிழ் பேராசிரியர் புனிதா ஏகாம்பரம் “நாட்டார் கலைகள்” பற்றி பேசினார். ”உயிர்மை” மனுஸ்ய புத்திரனின் பேச்சும், கனிமொழி பேச்சும் கேட்கமுடியாமல் போய்விட்டது.
கவியரங்கில் வைரமுத்து, மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர் பழனி பாரதி அருமையாக இருந்தது. குறிப்பாக கவிஞர் பழனி பாரதி கவிதைகள் மிக மிக அருமை!
பட்டிமன்றத்தில் திண்டுக்கல் லியோனி பட்டையை கிளப்பினார் என்றால் அது மிகையல்ல. என்னதான் அறிவு பூர்வமாக பேசினாலும், மக்களை சிரிக்க வைக்கும் பேச்சுதான் எடுபடுகிறது. கலைஞர் முதல் கடைக் கோடி தமிழர்கள் அனைவரும் வயிறு வலிக்க சிரித்தார்கள்.
இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா “இந்த மாநாட்டில் நான் பேசுவது என் வாழ்நாள் பாக்கியம் என்றார்”
நக்கீரன் கோபால் “அச்சுத்துறை சார்பாக” இன்னும் வலுவான கருத்தை எடுத்து வைத்து இருக்கலாம். எஸ் வி சேகர் பேசியது ஒன்றுமே புரியவில்லை!
இறுதிநாள் கருத்தரங்கில் அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகளான “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” மூலம் “தமிழனின் பண்பாட்டை” மிக அருமையாக பேசினார். பார்வையாளர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளை தட்டி எழுப்பினார் என்றால் அது மிகையல்ல.
வழக்குரைஞர் அருள்மொழி “போரை புறம் தள்ளி” என்ற தலைப்பில் பேசிய பேச்சும் மிக அருமையாக இருந்தாக நண்பர்கள் சொன்னார்கள்.
பேராசிரியர் ப்ர்வீன் சுல்தானா “உண்பது நாழி, உடுப்பது இரண்டே” என்ற தலைப்பில் நன்றாக பேசினார். ஆனால் அவரிடம் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்து விட்டேன்.
நிறைய நிகழ்ச்சிகள், ஏராளமான கூட்டம் காரணமாக நிறைய நண்பர்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.
விழா விருந்தினர்களை கவனிக்க கல்லூரி மாணவ, மாணவிகளை பயன் படுத்தினார்கள். நிறைய முனைவர் பட்டம் பெறும் ஆய்வு மாணவர்களை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது.
தமிழ்நாட்டில் இருந்து கட்சி சார்பில்லாமல் நிறைய தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்களை பார்த்தேன்.
செம்மொழி மாநாட்டில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், எங்கும் திரும்பினாலும் மக்கள் கூட்டம். வரலாறு காணத வெற்றி! ஏராளமான பொது மக்கள் “தமிழ் மொழி” மீது பற்றின் காரணமாகவும், மாநாடு எப்படி நடக்கிறது என்றும், அங்கு யார் யார் என்ன பேசுகிறார் என்று கேட்பதற்காக சாலையின் இரு ஓரங்களில் ஏராளமான பொது மக்கள் பெருந்திரளாக கலந்துக் கொண்டார்கள்.
இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி தனித் தனி பதிவாக இட வேண்டும். கோவையில் செவ்வாய் முதல் ஆரம்பித்து ஞாயிறு வரை தங்குவதற்கு அருமையான நட்சித்திர விடுதியும், தினமும் மூன்று வேளைகள் மிக அருமையான உணவுகளும், காலை மற்றும் மாலை போக வர அருமையான பேருந்துகளும், என்னை கவனித்து கொள்ள ஒரு காவல் அதிகாரி மற்றும் ஒரு ஆசிரியரும் கவனித்து கொண்டதை எப்படி சொல்வேன்! வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.
செம்மொழி மாநாடு – வரலாறு காணத வெற்றி! மொழியின் பெயரால் லட்ச கணக்கான மக்களை “கலைஞர்” ஒருவரால் தான் கூட்ட முடியும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்த மாநாட்டில் நானும் கலந்து கொண்டதை மிக மிக பெருமையாக கருதுகிறேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
4 Comments:
சிவா : செம்மொழி மாநாடு பற்றி உங்கள் பார்வையில் அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.
வாழ்த்துகள் சிவா!
தாங்கள் வாசித்த கட்டுரையை பதிவிடுங்கள்.
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
//
கவியரங்கில் வைரமுத்து, மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர் பழனி பாரதி அருமையாக இருந்தது. குறிப்பாக கவிஞர் பழனி பாரதி கவிதைகள் மிக மிக அருமை!
//
yen "kavignar" vairamuthu nu solla ivlo kastam?
மிக்க நன்றி வழிபோக்கன், ரவிசந்திரன் மற்றும் ஆளவந்தான்
நன்றி
மயிலாடுதுறை சிவா...
Post a Comment
<< Home