Friday, March 23, 2007

ராமாதாஸ் ஓர் மோசடி தலைவர் - வெற்றி கொண்டான்

நன்றி : குமுதம்

சமீப காலமாக டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டே அரசைத் தாக்குவது, தி.மு.க. தரப்பில் பெரும் அதிருப்தியை உண்டு பண்ணியிருக்கிறது. ராமதாஸின் இந்தத் ‘தாக்குதல்’ அரசியலைக் கடுமையாக விமர்சிக்கிறார் தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் வெற்றிகொண்டான்.

‘‘டாக்டர் ராமதாஸ் வில்லன் அரசாங்கம் நடத்தி வருகிறார். இது அவருக்குப் பழக்கப்பட்டதுதான். ஏற்கெனவே பாண்டிச்சேரியில் இப்படிச் செய்து பழக்கமிருக்கிறது. இப்போது தமிழகத்தில் கைவரிசையைக் காட்டத் துவங்கியிருக்கிறார். தன்னையும், தன்னுடைய மகனையும், அரசியலில் வைத்துக் கொண்டு தி.மு.க. ஆட்சியை மிரட்டும் வேலையில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறார்.

இப்படி தி.மு.க. அரசைத் தாக்குவதற்குக் காரணம், தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம்தான். தன்னை முன்னிலைப்படுத்தி ‘கலைஞர் இடத்தை’ப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் கலைஞர் இடத்தைக் கடவுளாலேயே கூட பிடிக்க முடியாது. கடவுளே கலைஞரின் வீட்டு வாயில்படியில் நிற்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு சத்ய சாய்பாபாவே சாட்சி. கலைஞரை யாரேனும் குறைசொல்லக் கருதினால், தன்னுடைய நாட்டு மக்களை அவமானப் படுத்தியதாக அர்த்தம். யாரையும், எவனையும் நம்பி ஆட்சி நடத்தத் தேவையில்லை. நாடு என் தலைவர் பக்கம் நிற்கிறது. மக்கள் என் தலைவர் பக்கம் நிற்கிறார்கள்.

சாதாரணமாக இவர்களுக்கெல்லாம் கலைஞர் பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால், கூட்டணி தர்மத்துக்காக தலைவர் அவர்களுக்குப் பதில் சொல்கிறார். நான் கலைஞரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார்தான் ஐயா. இடையில் வருகிற எந்த தலைவனையும் ‘ஐயா’ என்று அழைக்கக் கூடாது. பெரியாரை ஐயா என்ற அழைத்த வாயால் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் ஐயா என்று சொல்வது அசிங்கம். கலைஞருக்கு எத்தனை பெருந்தன்மை. தன்னைவிட வயதில் சிறியவரான ராமதாஸை, மருத்துவர் ஐயா என்று மேடைதோறும் கூறுகிறார். அந்த மரியாதையைக் கூட தக்க வைத்துக் கொள்ள ராமதாஸ§க்குத் தெரியவில்லை.

இவர் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணியைப் பற்றி வெளிப்படையாக விமர்சிப்பதுதான் இவரது வாடிக்கை. அரசியல் நாகரிகம் தெரியாதவர். ஆட்சியில் குறைகள் இருந்தால், முதல்வரை நேரில் சந்தித்துச் சொன்னால், அதைக் களைந்துவிடப் போகிறார். ஆனால், அப்படிச் செய்யாமல்
பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் கொடுப்பது ஏன்?

பிரச்னைகளை வளர்க்க வேண்டுமென்பதற்குத்தானே! என்னுடைய கோட்டை என்று இறுமாப்புடன் கூறிவந்த ராமதாஸ§க்கு, விருத்தாச்சலத்தில் ஒரு நடிகர் கொடுத்த அடியிலிருந்து இன்னும் மீளாமல் ஏதோதோ உளறிக் கொண்டு இருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவது, அறிக்கை விடுவது எல்லாம் ராமதாஸின் தலைக்கனத்தின் அறிகுறி.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் தலைவராக டாக்டர் ராமதாஸை எந்தக் காலத்திலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவருடைய மகன் டாக்டர் அன்புமணி கூட மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எங்கள் கட்சியிடம் இருந்த ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டைக் கூட கலைஞர் அவர் மகனுக்காக விட்டுக் கொடுத்தார். இது எவ்வளவு பெரும்தன்மை! அதையெல்லாம் கொஞ்சமாவது ராமதாஸ் நினைத்துப் பார்த்ததுண்டா?
நானும் ராமதாஸ் மீது நிறைய குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியும். எந்த அறிவாளியையும் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள ராமதாஸ் விரும்பியதில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன். இவர்களெல்லாம் உதாரணங்கள். ‘ராமதாஸ§க்கு எங்களால் கப்பம் கட்ட முடியவில்லை’ என்று இவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களே சொல்லியிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காகச் செயல்படுகிற தலைவன் என்றார். இப்படி மோசடியான தலைவர் யாரும் இருக்க முடியாது.
தானே பாண்டிச்சேரி முதல்வர், தானே தமிழ்நாட்டு முதலமைச்சர், தானே இந்தியாவின் பிரதமர் இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு ராமதாஸ் தூங்குகிறார். எந்த நேரத்தில் யாருக்கு நண்பன், யாருக்கு விரோதி என்று அடையாளம் காணமுடியாத ஒரு நபர் இந்தியாவில் இருக்கிறாரென்றால் அது ராமதாஸ்தான்.

நேருவை, இந்திராவைக் கடந்து வந்தவர் கலைஞர். ஜெயப்பிரகாஷ் நாராயணனைக் காப்பாற்றிய தலைவர். இந்த மாதிரி சின்ன ஆட்களுக்கெல்லாம் அவர் பதில் சொல்லத் தேவையில்லை. ஒரு விஷயத்தை இங்கே சொல்றேன். எங்களை மாதிரி தோற்றவர்களும் யாருமில்லை. எங்களை மாதிரி ஜெயித்தவர்களும் யாரும் இல்லை. உயர்வு, தாழ்வு எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். அதனால் இதெல்லாம் எங்களுக்கு சாதாரண விஷயம்.

நொடிக்கு நொடி சுய மரியாதை பேசி வரும் ராமதாஸ், தன்னையும் தன் மகனையும், ஐயா, சின்ன ‘ஐயா’ என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார். இதையெல்லாம் மாற்றிவிட்டு கலைஞரையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்யட்டும். என்னைப் பொறுத்த வரை கூட்டணியில் இருந்து கொண்டு அந்தக் கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்யும் ராமதாஸ், ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. தி.மு.க. என்பது ஒரு பனங்காட்டு நரி. அது ராமதாஸ் போன்றவர்களின் சலசலப்புக்கு அஞ்சாது’’ என்று சொல்லி முடிக்கும்போது வெற்றிகொண்டானின் கண்களில் உண்மையான தி.மு.க. தொண்டனின் சீற்றம்.

_ திருவேங்கிமலை சரவணன்

நன்றி குமுதம்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger அபி அப்பா said...

சிவா! நான் உங்களை tag செய்துள்ளேன்!

http://abiappa.blogspot.com/2007/03/blog-post_21.html

Friday, March 23, 2007 10:52:00 PM  
Blogger அபி அப்பா said...

சிவா! இந்த தாக்குதலை வெற்றி கொண்டான் எப்போதோ செய்திருக்க வேண்டும். முத்த விட்டு ஆபரேஷன் போல் தான் இது. இப்போ வரிந்து கட்டிகொண்டு கலைஞரிடம் பா.ம.க MLA க்கள் போய்"உங்க வெற்றிகொண்டான் எங்க ஐயாவை இப்டீ பேசிபுட்டாரே"ன்னு கூப்பாடு போடுகிறார்கள்.

Saturday, March 24, 2007 1:43:00 AM  
Blogger Mookku Sundar said...

பேசாமல் சட்டசபையைக் கலைத்து விட்டு, தேர்தலுக்கு திமுக தயாராவதுதான் நல்லது என்று தோன்றுகிறது. ராமதாஸ் மாதிரி ஆசாமிகளை நம்பிக்கொண்டு, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று மு.க நினைப்பது கேவலமாகத்தான் இருக்கிறது.

ராமதாஸுக்கு வேறு நெருக்கடி. விஜயகாந்த் விருத்தாசலத்தில் கொடுத்த அடி அவரைக் கடுமையாக பாதித்து, ஆட்சியில் இருப்பவர்களை மிரட்டிக் கொண்டே இருந்தால், தன் பக்கம் எல்லார் கவனமும் இருக்கும் என்று கணக்கிட்டு, திமுக மைனாரிட்டி அரசை சீண்டிக்கொண்டே இருக்கிறார். மூப்பனாரை ஐயா என்று கூப்பிட்டதையே கபிஸ்தலம் பண்ணையாரின் காட்டு தர்பார் என்று கிண்டலடித்த மு.க தலைவலி தைலாபுரத்தை ஐயா என்று மேடைதோறும் அழைப்பது ,,,கண்டிப்பாக காலத்தின் கட்டாயம்தான்.

ராமதாஸ் மனதில் அடுத்த தேர்தலில் அன்புச்சகோதரியுடன்தான் கூட்டணி என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டதோ..???

ஆக்கங் கெட்ட அரசியல்ல்..!!!!!!!!

Saturday, March 24, 2007 2:10:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது