தமிழகப் பயணம்...
தமிழகப் பயணம் - 3வது முறை
அமெரிக்கா வந்து கிட்டதட்ட 6 ஆண்டுகள் முடிந்துவிட்டன. தற்பொழுது 30 மாதங்களுக்குபிறகு நாளை தமிழகப் பயணம். மனம் படபடவென்று அடித்துக் கொள்கிறது. தமிழகம் செல்லஇன்னமும் 48 மணிநேரமே உள்ளது.
இன்னமும் அப்பா கேட்ட Perfume வாங்கவில்லை. தாய்மாமாவிற்கு Marlboro Cigarette வாங்கவில்லை. அம்மா கேட்ட Multivitamin மாத்திரை வாங்கவில்லை. மற்றோரு நண்பர் பிறந்தநாளுக்கு T Shirt வாங்கவில்லை. பாழாய் போன மனது எதைப் பார்த்தாலும் வாங்கி தர சொல்லுகிறது. ஏதை வாங்குவது ஏப்படி எடுத்து சொல்வது, நல்லவேளை British Airways luggage weightஐ குறைக்கவில்லை. வாழ்க British Airways.
30 மாதங்களுக்கு பிறகு செல்வது மனம் ரொம்ப ஏங்குகிறது.
அப்பாவை புகைப் படத்தில் பார்த்ததில், அப்பாவின் பழைய கம்பீரம் போய்விட்டது.அம்மா மேலும் கறுத்து குண்டாக ஆகிவிட்டார்கள். கால்வலி என்று தொலைபேசியில் சொன்னார்கள். மனம் வலித்தது.
தம்பிக்கு திருமணம் ஆகி குழந்தையும் பிறந்துவிட்டது. அக்குழந்தையை தூக்கி கொஞ்சமனம் ஏங்குகிறது. சித்தி பசங்கள், மாமா பையன் நல்ல வேலைக்கு சென்றது மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
அப்பாவின் தம்பி(சித்தப்பா) 3 மாதங்கள் முன்பு இறந்துவிட்டார்கள். அப்பாவிற்கும் அந்த வீட்டிற்கும் அவ்வளவாக நல்ல தொடர்பு இல்லை, ஆனால் நான் சென்று விசாரிக்க வேண்டும். சித்தி பெண்ணிற்கு திருமணம் ஆகி குழந்தைப் பிறந்துவிட்டது. குடும்பத்தில் எத்தனை புதுவரவுகள்.
இரண்டு சித்தப்பாக்கள் ஒய்வு பெற்றுவிட்டார்கள். ஓய்வு பெற்றது ஏதோ இழக்ககூடாதை இழந்ததைபோல உள்ளார்கள். அவர்களை போய் தேற்றவேண்டும். ஓய்வு எவ்வளவு ஓர் சுகமான அனுபவம்.
சென்னையில் வலைப்பதியும் நண்பர்களை பார்க்க ஆர்வம்.
புத்தக கண்காட்சி செல்ல ஆசை.
ராயபேட்டை பொன்னுசாமியும், அஞ்சப்பரும், முருகன் இட்லிகடையும் போகவேண்டும்.
மனதிற்கு பிடித்த சில அரசியல் தலைவர்களைப் பார்க்க வேண்டும்.
நான் பிறந்த ஊரில் நல்ல பல விசயங்களை புகைப்படத்தில் சுட்டு தள்ளவேண்டும்.கோவில் கோபுரங்களை படம் எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லவேண்டும், நான் மதிக்கும் பல ஆசான்களை பார்த்து வணங்கவேண்டும்.
ஜாலியாக சைக்களில், அப்பா வைத்து உள்ள பைக்கில் ஊர் சுற்றவேண்டும். அம்மா கையால் கார அடையும், பால் பாயசமும், சித்தி கையால் தட்டை முருக்கும், போளியும் பாட்டி கையால் கேசரியும் சாப்பிட வேண்டும். நண்பர்களோடு அசைவ உணவகம் சென்று கொழி பிரியாணியும், வறுத்த மீனும், சுக்கா வருவலும் சாப்பிட வேணும். ஒரு பயல்களுக்கும் செலவு வைக்க கூடாது, பணத்தை தண்ணியாகசெலவு செய்யணும்...
எல்லாவற்றிக்கும் மேலாக சென்ற முறை சென்ற பொழுது கல்லூரி தோழி ஒருத்தி "சிவா எப்ப வந்தாலும் என்னை நினைப்பு வைத்து போன் பண்ணுவாயா" என்று கேட்டது காதில் ஒலித்து கொண்டே உள்ளதே. போன் நம்பர் மாறாமல் இருக்குமா?
மற்றோரு பள்ளி தோழி, சிவா சீக்கரம் சம்பாரித்துவிட்டு ஊருக்கு வந்துவிடு என்றாள். நான் உடனே வந்துவிட்டாலும் நீ என்னை அடிக்கடி பார்த்து பேசவா முடியும் என்றதற்கு அவள் உடனே "சிவா நீ நம்மவூரிலேயே இருப்பது ஒர் தெம்புதானே" என்றாளே...அதன் அர்த்தம் என்ன என்பதை இந்த முறை கேட்க வேண்டும்...
இப்படி எத்தனை எத்தனை ஆசைகள்....
அத்தனையும் 20 நாட்களில் முடித்து விடலாமா?
மீண்டும் உங்களை தமிழக மண்ணில் இருந்து தொடர்பு கொள்கிறேன்...
நன்றி
மயிலாடுதுறை சிவா...