செம்மொழி மாநாடு - மேலும் சில உங்கள் பார்வைக்கு
வாசிங்டன் சூலை 2010
செம்மொழி மாநாடு - மேலும் சில உங்கள் பார்வைக்கு
மாநாட்டில் தினமும் மதிய உணவு மிக மிக அருமை. எடுத்துகாட்டாக உணவு வகைகளில் இனிப்பில் பால் பாயசம், சேமியா பாயசம், அவல் பாயசம், இனிப்பு போளி, கந்தரப்பம், சங்கரை பொங்கல் மற்றும் அசைவ உணவில் சிக்கன் குருமா, மட்டன் குருமா, மீன் வறுவலும் இருந்தது. அதேப் போல் சைவ உணவில் நெய், பருப்பில் ஆரம்பித்து எல்லா வகையான உணவுகளும் இருந்தன. இப்படி தரமான உணவை எல்லோரும் ரசித்து சாப்பிடனர், அனைவரும் இதனை மனதார பாராட்டினார்கள்.
தினமும் “உணவகத்திற்கு” மத்திய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும், குறிப்பாக உணவு அமைச்சர் வேலு வந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். உணவு அமைச்சரை பார்த்து நேரில் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
மாநாட்டின் பாதுகாப்பிற்கு ஏராளமான காவல்துறை நபர்களை பார்க்க முடிந்தது. அவர்கள் கிட்டதட்ட பத்து நாட்களுக்கும் மேலாக மாநாட்டிற்கு உதவி வருகிறார்கள். அவர்களும் இந்த ஆய்வரங்க உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். இவற்றில் நிறைய இளைஞர்களை பார்க்க வாய்ப்பு ஏற்பட்டது. இவர்கள் வயது 23, 24 இருக்கும், இவர்கள் (எஸ்.ஐ) சப் இன்ஸ்பெக்டர் ஆக கிட்டதட்ட 20 வருடங்கள் ஆகுமாம்! இவர்களுக்கு தங்குவதற்கு திருமண மண்டபங்களை ஒதுக்கி இருக்கிறார்கள். மூன்று வேளையும் உணவு பொட்டலம்தான்! இவர்களுக்கு தங்குவதற்கும், சாப்பாட்டிற்கும் இன்னும் வசதி செய்து கொடுத்து இருக்கலாம் என்று சிலர் வருத்தம் தெரிவித்தார்கள்.
மாநாட்டில் பேச வந்தவர்களுக்கும், கட்டுரையாளார்களுக்கும் முதல் நாளே “அடையாள அட்டை” தர முடியவில்லை! இதனால் வெளி நாட்டில் வந்து இருந்த சிலர் மிக மிக வருத்தப் பட்டார்கள். இவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் படி ஆகிவிட்டது.
அதேப் போல் வந்து இவர்களுக்கு மாநாட்டு மலரும், ஆய்வரங்க மலரும், விழாவின் இலச்சினை (லோகோ) பொருத்திய பட்டயம் வாங்குவதற்கும் சில சிக்கல் இருந்தன.
மாநாட்டிற்கு கட்டு அடங்காத கூட்டம் காரணமாகவும், தமிழ் நாட்டில் பல்வேறு துறை முக்கிய நபர்களுக்கு அரங்கில் முறையாக அமர இடம் கிடைக்கவில்லை. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு மட்டும் நல்ல இடத்தில் அமர இடம் கிடைத்துவிட்டது. ஆனால் அந்த இடத்திற்கு செல்வதற்கு பல இடங்களில் காவல்துறை அதிகாரிகளிடம் “அடையாள அட்டை மற்றும், விழா அழைப்பிதழை” காண்பிக்க வேண்டி இருந்தது.
விழாவை சுதா சேஷய்யா தொகுத்து வழங்கினார். ஐந்து நாட்களும் அவர்களே தொகுத்து வழங்கினார்கள், வேறு சிலருக்கும் வாய்ப்புகள் கொடுத்து இருக்கலாம்!
குஷ்பு பட்டிமன்றத்தில் ”சின்னத்திரை” சார்பாக பேசுவதாக இருந்தாம்! நல்லவேளை இல்லை!
மத்திய அமைச்சர் ராசா மிக மிக சுறுசுறுப்பாக இருந்தார். கவியரங்கத்தில் போட்டு தள்ளிய பல நபர்களை அமைச்சர் பொன்முடியும், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் சீட்டு கொடுத்தும், அவர்கள் பேசி முடிப்பதாக இல்லை!
பொது அரங்கத்தில் ”கருத்தரங்களில்” மற்றும் “கவியரங்கத்தில்” பேசிய வெகு சிலரை தவிர நிறைய நபர்கள் முழுக்க முழுக்க சிபாரிசில் வந்தார்கள் என்று பேசிக் கொண்டார்கள். குறிப்பாக வைரமுத்து “கவியரங்கில்” யார் பேசுவார்கள் என்பதை முடிவு செய்தார் என்றார்கள்.
விழா ஒருநாளில் காலை திருப்பாவை சகோதரிகளின் நாதஸ்வரம் மிக மிக அருமையாக இருந்தது.
திரைப் பட நடிகர்களுக்கு நல்ல இடங்களை கொடுக்கவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருந்தது. பாக்யராஜ், பூர்ணிமா, வடிவேல், தியாகராஜன், பிரசாந்த், பிரகாஷ்ராஜ், விஜய்குமார் மற்றும் பிரபு இவர்கள் மாநாட்டில் தலையை காட்டினார்கள், ஆனால் எல்லா நாட்களும் வந்தார்களா? என்று தெரியவில்லை.
செம்மொழி மாநாடு நடக்கும் பொழுதே, இணைய மாநாடும் நடந்தது. நிறைய நண்பர்களை பார்க்க வேண்டும் என்று இருந்தேன், பார்க்க முடியமால் போய்விட்டது.
ஐந்து நாட்கள் கழித்து சென்னை புறப்படும் பொழுது மீண்டும் இப்படி ஒரு மாநாடு எப்படி எங்கு நடக்கும் என்று ஏக்கமாக இருந்தது. அவனாசி சாலையில் சென்னை நோக்கி பயணிக்கையில், சாலையின் இருபுறமும் மக்கள் சாரை சாரையாக கோவை நோக்கி திரும்பி கொண்டிருந்தார்கள். எண்ணற்ற மக்களை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியும், மீண்டும் ஊர் செல்ல வேண்டுமே என்ற வருத்தமும் கலந்து இருந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே என் மொழி பிறந்தது என்பதும், உலகின் மிகுந்த பழமையான மொழி என் தாய் மொழி என்பதும், என் தாய் மொழி செம்மொழி இன்னும் காணவேண்டிய வெற்றிகள் பல உள்ளன என்பதை மனது அசைப் போட்டு கொண்டே, மீண்டும் மற்றோரு செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று நம்பிக்கையில் சென்னை சென்று வாசிங்டன் செல்ல ஆயுத்தமானேன்!
வாழ்க என் தாய் மொழி! வளர்க அதன் புகழ்!
நன்றி
மயிலாடுதுறை சிவா...