Thursday, August 20, 2009

கவிஞர் ஜெயபாஸ்கரன்


வாசிங்டன் ஆக்ஸ்டு 2009


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை விருந்தினர்களில் கவிஞர் ஜெய பாஸ்கரனும் ஒருவர். மிக எளிமையான அன்பாக பழக கூடிய ஒரு தமிழ் ஆர்வலர் என்றால் அது மிகையல்ல. இவரின் மிகப் பெரிய பலம் இவரது எளிமையான புது கவிதைகள் மட்டுமல்ல, கட்டுரைகளும் இவரை ஒரு தனி மனிதனாக அடையாளம் காண்பிக்கிறது. இவருடைய ஜெயபாஸ்கரன் கவிதைகள் மற்றும் ஜெயபாஸ்கரன் கட்டுரைகள் இரண்டும் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள். இவருடைய முதல் வெளிநாட்டு பயணமே அமெரிக்காதான், அதுவும் தமிழ்ச் சங்க பேரவை விழாவிற்கு.

அவருடைய கவியரங்கத்தில் தமிழ்தாய் ஒருவனிடம் பேசுவதை போல ஒரு புது கவிதையை வடித்து இருந்தார். தமிழ்த் தாய் சராசரி தமிழனிடம் கேட்ட கேள்வி எல்லாம் மிக மிக உணர்வு பூர்வமானவை. தமிழனுக்கு என்று ஒரு இடம் இல்லையே என்றும், எங்கெல்லாம் தமிழ் மறக்கப் பட்டு இருக்கிறது என்றும், மிக அழகான தமிழ்ப் பெயர் கொண்ட ஊரின் பெயர்கள் எப்படி கால ஓட்டத்தில் மாற்றப் பட்டு இருக்கிறது என்றும் தன்னுடைய கவிதைகளில் தமிழ்த் தாயின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். இந்த கவிதையை பார்வையாளர் மிக மிக ரசித்து கேட்டார்கள்.


விழாவின் இறுதி நாள் இலக்கிய கூட்டத்தில் சிலப்பதிகாரத்தின் பெருமைகளை பட்டியிலிட்ட சிலம்பொலி சு செல்லபனுக்கு பிறகு, மரபு கவிதைகள் நிறைய பேசி, சங்ககாலத்தின் இலக்கியத்தை அவை மகிழ பேசிய தமிழருவி மணியனுக்கு பிறகு, இவர் எப்படி பேசி அவையோரை கவரப் போகிறார் என்ற கவலையோடு காத்திருந்த வேலையில் கவிஞர் ஜெயபாஸ்கரன் இவருடைய கவிதைகள் மட்டும் அல்லாது, சமுதாயத்தில் சமூக தாக்கத்தோடு எழுதிய கவிதைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவருடைய பல கவிதைகள் நம் இயல்பு வாழ்க்கையில் கடந்து செல்பவை. இவர் ஒரு முறை தன் கைபையை தொலைத்து இருக்கிறார் அதனை கவிதையாய் எழுதி இருக்கிறார். அந்த கைபையை எடுத்தவன் எப்படிஎல்லாம் இவரைப் பற்றி நினைத்து இருப்பான் என்று! இவருக்கு அணிவித்த பொன்னாடையை என்ன செய்வது என்று கவிதை எழுதி இருக்கிறார். இவர் வசிக்கும் வீட்டிற்கு வாடகை தருவதை வாடகை என்ற கவிதையில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் உள்ள குயிலுக்கும், அங்கே வரும் தென்றல் காற்றுக்கும் வாடகை தருகிறேன் என்று மிக அழகாக மனதை கொள்ளை கொள்கிறார். இவருடைய கட்டுரை தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரையில் "சமுதாயப் பிரச்சினை" பற்று எழதப் பட்ட கட்டுரைக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு கொடுக்கும் அமைப்புகள் (அரசு உட்பட) அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க கவனம் கொண்டுள்ளதா? என்று கேள்வி கேட்கிறார் கவிஞர்.

இவருடைய பேட்டி ஒன்றில் இவர் எப்படி இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று மிக எளிமையாக சொல்லுகிறார். யானைகள் மிக அபூர்வமான விலங்கினம், இயற்கையோடு மிக தொடர்பு உடைய ஒரு விலங்கினம் யானை என்றும் அது கொஞ்ச கொஞ்சமாக இந்தியாவில் குறைந்து வருவது கண்டு மிக வருத்தப் பட்டார். நம் தோட்டங்களில் வரும் "வேலிகாட்டான்" (வேலிகாத்தன்) என்ற முள் வகையை சார்ந்த தாவரத்தால் நம் தோட்டம், பயிர்கள், வயல் வெளிகள் மிகவும் பாதிப்பிற்கு நாம் ஆளாகிறோம் என்றார். இதனை வேளாண்மைத் துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இதனை அழிக்க முற்பட வேண்டும் என்றார். கடைசியாக இவர் வருத்தமாக சொன்ன விசயம் எனக்கும் மிக மிக பாதித்தது. அதாவது நம் தாய்மொழி நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த, பயிற்று வைத்த, பேச வைத்த மொழி, இதனை நான் இந்த பரம்பரை வரை எடுத்து வந்துவிட்டேன், இதனை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்து செல்ல போகிறேன் என்று கவிஞர் ஜெய பாஸ்கரன் வருத்தப் பட்டது இன்னமும் நீங்கா நினைவில் உள்ளது.
இப்படிபட்ட நல் உள்ளங்களை தொடந்து அறிமுக படுத்தி வரும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவைக்கு எப்படி நன்றிகளை காணிக்கையாக்குவது?

நன்றி


மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, August 17, 2009

ஏமாற்றிய ஜெய மோகன்?

வாசிங்டன். ஆகஸ்டு 2009

நான் வாழும் பகுதியில் தமிழ் இலக்கிய வட்டம் உள்ளது. சிலச் சமயம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக எங்களால் சில தமிழ் அறிஞர்களை உடன் பேச வைக்க ஏற்பாடு செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், எங்கள் இலக்கிய வட்டம் மூலம் தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கும் தமிழ் அறிஞர்களை வரவழைத்து கூட்டம் நடத்துவது வழக்கம். இந்த வழக்கத்தின் அடிப்படையில் இரண்டு வாரம் முன்பு எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு சென்று இருந்தேன். அவருடைய எழுத்துகளை நிறைய படிக்காவிடிலும், ஒரளவு படித்து இருக்கிறேன். அவருடைய சில நாவல்களை வாங்கி வைத்து இருக்கிறேன். அவரை சந்திப்பதற்குள் இதனை படித்துவிட வேண்டும் என நினைத்தேன், முடியவில்லை.

எங்கள் பகுதியில் இருந்து கிட்டதட்ட 50 பேர்களும் வெளியூரில் இருந்து கிட்டதட்ட 10 பேர்களுக்கும் மேல் வந்து இருந்தார்கள். முதலில் அவரது பேச்சும் பிறகும் கலந்துரையாடலும் இருந்தது. அவர் கிட்டதட்ட 20 நிமிடங்கள் பேசினார். உண்மையிலேயே எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அல்லது நான் ரொம்ப அவரிடம் எதிர் பார்த்துவிட்டேன் போலும். உலக இலக்கியங்களை படித்து இருப்பதாக சொன்னார். ஆனால் அவரது பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்த நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை!

முதல் பார்வையில் ஜெயமோகன் மிக மிக அமைதியாகவும், பண்பாளராகவும் தெரிந்தார். மாற்று கருத்துகளையும் மிக கவனமாக கேட்டுக் கொண்டும் அவர் கருத்துகளை பலச் சமயம் பகிர்ந்து கொள்ள மறுத்தார். கிட்டதட்ட 20 வருடங்கள் இலக்கியத்தின் மீது பரிச்சியம் என்றார். மானுட ஞானத்தின் பெரும் கட்டுமானம் இலக்கியம் என்றார். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் என்றார். அவரது நெருங்கிய நண்பரின் தற்கொலையும், அப்பா மற்றும் அம்மாவின் தற்கொலையும் அவரை நிறைய சிந்திக்க வைத்தாக சொன்னார்.

நவீன கல்வி முறை, பொது கல்வி முறை பற்றி அவருடைய பார்வைகளை சொன்னார். இந்திய கல்வி முறையில் பல குறைப் பாடுகள் இருப்பதை சுட்டி காண்பித்தார். தமிழக பல்கலைகழங்களில் தத்துவத்திற்கு என்று துறைகள் சுத்தமாக இல்லை என்று வருத்தப் பட்டார். பொதுவாக இந்தியாவில் இலக்கியம் எதிர்பார்த்த அளவு வளரவில்லை என்றார்.

கலந்துரையாடலின் பொழுது, நண்பர் ஒருவர் ஈழத்தில் இவ்வளவு தமிழ் உயிர்கள் கொல்ல படுவது குறித்தும், மனித அவலங்களைப் பற்றி நீங்கள் எதுவும் எழுதவில்லை என்றார். அதற்கு ஜெய மோகன் இந்த கூட்டம் அதற்கான கூட்டம் அல்ல என்றும், நான் பதில் சொல்ல மாட்டேன் என்று சொன்னார். ஈழம் பற்றி எனது பார்வைகள் முற்றிலும் வேறு என்றார். நான் அடைந்த இழப்பு மிக மிக அதிகம் என்றார். என்னால் சுத்தமாக அவரின் போக்கு எண்ணங்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை.

இன்னோரு நண்பர், தனித் தன்மை / பொது தன்மை பற்றி பேசி கொண்டிருந்த விசயத்தை ஒட்டி "தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிந்து தனியாக இருந்து இருந்தால் இன்னும் நிறைய வளர்ச்சி அடைந்து இருக்குமே?" நாம் இந்தியாவில் சேர்ந்து இருப்பதால் நமக்கு என்ன பெரிய பலன்கள் கிடைத்துவிட்டது? என்று வருத்தப் பட்டு ஜெய மோகனிடம் கேட்ட பொழுது அதற்கும் அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டு, அது உங்கள் கருத்து என்றார்!!!

எனது சார்பாக அய்யா உங்களோடு ஒரு கலந்து உரையாடுவதில் மகிழ்ச்சி என்றும், ஆனால் ஒரு எழுத்தாளன் சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும், ஆனால் நீங்கள் உங்கள் கருத்துகளை மனம்விட்டு பேச மறுக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு, என் கேள்வியை முன் வைத்தேன். முன்பு ஒரு முறை " தந்தை பெரியாரை ஒரு பாமரன் என்று சொன்னீர்கள்?" ஏன் அப்படி சொன்னீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன்.

நல்லவேளை இந்த கேள்விக்கு அவர் பதிலை சொன்னார். தந்தை பெரியார் மிகப் பெரிய சமூக சீர்சிருத்தவாதி என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவர் ஒரு சிந்தனையாளர் அல்ல என்றார்! பெரியார் வாழும் காலத்தில் எம் என் ராய் / இஎம்ஸ் நம்பூதிரிபாட் / அண்ணல் அம்பேத்கார் - இவர்கள்தான் சிந்தனையாளர்கள். பெரியார் அல்ல என்றார்.

எழுத்தாளர் ஜெய மோகனுக்கு பிடித்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், தி ஜானகிராமன் என்றும், எழுத்தில் கறாரான சுந்தர ராமசாமி, ஓங்கி ஒலிக்காத வலுவான அசோகமித்ரன், காட்சி சித்திரங்களை அப்படியே கொடுக்கும் சுஜாதா இவர்களை எல்லாம் பிடிக்கும் என்று சொன்னார்.

தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ண கூடிய எழுத்தாளர்களில் ஜெய மோகன் ஒருவராக இருக்கிறார் என்பதில் நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் இவர் தன்னுடைய மனதில் பட்ட கருத்துகளை பொது வெளியில் வைக்க தயங்குகிறார். அது மட்டுமல்ல அவர் படித்த ரசித்த உலக இலக்கியத்தை அல்லது உலக சினிமாவை அல்லது மிகப் பெரிய எழுத்தாளர்களை பற்றி அவர் பகிர்ந்து கொள்ளவே இல்லை. பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல தரமான பேச்சை கொடுத்து இருக்கலாம். அவர் ஒன்றும் சிறந்த மேடை பேச்சாளன் அல்ல, இருப்பினும் ஏதாவது சுவையாக பேசி இருக்கலாம்.

உதராணமாக தமிழ்ச் சங்க பேரவையில் நாங்கள் அழைத்து வந்து எழுத்தாளர் பிரபஞ்சன் மிக அருமையாக கலந்துரையாடினார். மனதில் பட்டதை அப்படியே சொன்னார். அவற்றுள் ஏதாவது தவறு இருந்தால் நீங்கள் இதனை எடுத்து கொள்ள வேண்டாம் என்றார். அவருக்கு மிக மிக பிடிந்த உலக இலக்கியத்தில் சிறந்த 100 கதைகளை பற்றி விவரங்களை பார்வையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். நம் இந்திய / தமிழக சமுதாயத்தில் சாதிகள் எப்படி புரையோடி விட்டது மிக மிக வருந்தினார். பெண் முன்னேற்றம் எவ்வளவு முக்கியம் என்றார். தாழ்த்தப்பட்ட / ஒடுக்கப் பட்ட / உரிமைகள் மறுக்கப் பட்ட மக்களின் "தலித் இலக்கியம்" பரவாலாக்க படவேண்டும் என்றார். தமிழ் சமுதாயத்தில் சிற்றிதழ்களே தரமான கட்டுரைகளையும், இலக்கியத்தையும் தொடர்ந்து எழுதி வருகிறது என்றார். நீங்கள் அனைவரும் சிற்றிதழ்களை ஆதரிக்க வேண்டும் என்றார். பெண் எழுத்தாளர்கள் மிக மிக குறைவு, பெண்கள் நிறைய எழுத வேண்டும் என்று ஊக்கப் படுத்தினார். ஆனால் ஜெய மோகன் இதற்கு நேர் எதிர்?! ஒப்புமை செய்வது தவறு என்றாலும், மனம் எதிர்பார்த்து தொலைத்துவிட்டது!

ஒருவேளை நான்தான் ஜெய மோகனிடம் நிறைய எதிர்பார்த்துவிட்டு சென்றுவிட்டனோ என்று தோணுகிறது. இருந்தாலும் ஜெய மோகன் இன்னும் கொஞ்சம் வெளிப் படையாக இருந்து இருக்கலாம்!!! அவரிடம் இருந்து ஏதாவது புதிதாக கருத்துகள் அல்லது செய்திகள் கிடைக்கும் என்றும் எதிர் பார்த்து ஏமாந்து போனேன்?! என்பது என் எண்ணம்.

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அண்ணன் தொல் திருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!





வாசிங்டன். ஆக்ஸ்டு 17, 2009



என் மண்ணின் மைந்தன் அண்ணன் தொல் திருமாவிற்கு வாழ்த்துகள் பல!


நாம் பயணிக்க வேண்டிய பாதையையும், நம் மக்களுக்கு மீட்டுத் தர வேண்டிய பணிகளும் ஏராளம்.



அயராமல் தொடர்ந்து போராடுவோம். ஒலிக்கட்டும் உனது குரல் டெல்லியில்!
இந்த பிறந்தநாளில் அண்ணனை நாடாளுமன்றம் அனுப்பிய சிதம்பரம் வாக்களர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல....



அன்பு தம்பி




மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது