Thursday, July 09, 2009

தமிழ் விழா 2009 - வைரமுத்தும் சாதிப் பற்றும்

சூலை 4, 2009.

இந்த விழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவர் மருத்துவர் Ellyn Shander என்றால் இவருக்கு நேர் எதிராக ஒருவர் சொதப்பினார் என்றால் அவர்தாம் நம் வைரமுத்து. இவருடைய பல பாடல்கள் நம் மனதிற்கு மிக மிக நெருக்கமாக இருந்தாலும், இவரிடம் உள்ள கர்வம் இந்த முறை என்னை மிக மிக வெறுப்பு அடைய செய்தது. இவர் மிகப் பெரிய படைப்பாளி என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

ஒவ்வோரு ஆண்டும் பேரவை மிகப் பெரிய தமிழ் அறிஞர்களை, ஏழ்மைநிலையில் இருந்தாலும் அவர்களையும் கூப்பிட்டு பேரவை அவர்களை கெளரவ படுத்தும். இந்த முறை பேரவை விழாவிற்கு நமது விழா குழு இவரை அழைக்கவில்லை. அதாவது நாம் செலவு செய்து அவரை கூப்பிடவில்லை. இந்த விழாவிற்கு பெரும் பணம் உதவி செய்த நபர் வைரமுத்துவை கூப்பிட ஆசைப் பட்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்துக் கொண்டார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் பேரவை விழாவில் என்ன பேசினாரோ அதில் பாதி சதவீதம் அதனை அப்படியே பேசினார் என்றால் மிகையல்ல. அதுமட்டும் அல்ல இவர் அலட்டிய விதம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. விழா முதல் நாள் மாலை பேச அழைத்தோம். அவர் மறுத்துவிட்டார். ஒருமுறைதான் பேசுவேன் என்றும் அதுவும் விழாவின் இரண்டாம் நாள்தான் பேசுவேன் என்று அடம் பிடித்தார். அதுமட்டும் அல்ல அவர் வந்து பேச போவதை பலமுறை ஒலி பெருக்கியில் அறிவிக்க வேண்டுமாம்...என்ன கொடுமை சார் இது....!!!இவர் பார்க்காத பணமா? நம் தங்க தமிழ்நாட்டில் ஒரு கவிஞர் கோடிஸ்வரன் இருக்கிறார் என்றால் அது இவர்தான்....ஆனால் இன்னும் அந்த கர்வமும் அலட்டலும் குறையவில்லை! இவர் அடைந்த புகழுக்கு பின் இவர் இன்னும் மனபக்குவம் அடையவில்லை என்று தோன்றியது.

என் மனதை வருத்த படவைத்த விதம் என்றால், நம் இளைய தலைமுறைக்கு ஒன்று இரண்டு மூன்று நான்கு என்று சொல்லி கொடுக்கும் பொழுது அப்படியே தமிழையும் சேர்த்துக் கற்று கொடுங்கள் என்றார். அதாவது ஒரே குலம் மனித குலம், சாதி இரண்டு ஆண் மற்றும் பெண், தமிழ் மூன்று இயல், இசை, நாடகம், திசைகள் நான்கு, இப்படி சொல்லிக் கொண்டே போனார்.

வழக்கம்போல் நானும் தமிழும், என் தமிழ், அப்படி இப்படி என்று கர்வமாக பேசிவிட்டு, இந்த விழாவின் சிறப்பு அம்சம் "அண்ணா நூற்றாண்டு" அதற்காக விழா மலரில் அவரின் புகைப் படமும் அவரைப் பற்றிய கட்டுரையும் வந்துள்ளது என்று பாராட்டிவிட்டு, ஆனால் ஒன்றை மறந்துவிட்டீர்கள் என்றார். தேவர் திருமகனாரின் புகைப் படமோ அல்லது அவரைப் பற்றிய கட்டுரையோ இதில் இல்லை என்று வருத்தப் பட்டார். இந்த ஆண்டு தேவருக்கு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றார். தேவரின் பெருமைகளை பட்டியல் இட்டார். தேவரின் முழு பெயரை கூட அவர் உச்சரிக்கவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கம் என்று சொல்லவே இல்லை. தேவர் திருமகனார் என்று பெருமை பட்டு கொண்டார். தேவரின் முடி, அவர் நடந்து சென்றால் பட்டு கம்பளம் அது இது என்று அடுக்கி கொண்டே போனார். இவரின் சாதிப்பற்று அப்பட்டமாக தெரிந்தது.

வைரமுத்து தன்னுடைய முன்னுரையில் சாதி இரண்டு, அதாவது ஆண் சாதி மற்றும் பெண் சாதி என்று சொல்லி விட்டு, இப்பொழுது என்ன தீடீர் தேவர் பாசம்? வைரமுத்து மிகுந்த சாதிப் பற்று உடையவர் என்று நன்கு தெரிந்தாலும் விழாவில் தேவரின் பெருமைகளை அதுவும் கடல் கடந்து பேசியது மிக மிக நெருடலாக இருந்தது.

இதைவிட கொடுமை என்னவென்றால் பேச்சின் கடைசியில் ஈழ தமிழர்கள் பற்றி நான் பேசாமல் இருந்துவிட்டால் நான் தமிழனே அல்ல என்று பேசிவிட்டு கைதட்டல் வாங்கி கொண்டார். வருகிற வாரம் அவரின் பிறந்த தினமாம், அதை கவிஞர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கமாம்! இந்த முறை அதனை கொண்டாடவில்லையாம்! காரணம் ஈழ தமிழர்கள் அங்கே கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் சமயத்தில் நான் பிறந்த தினம் கொண்டாடுவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன் என்றார். என்னே ஒரு தியாகம்! என்னே ஒரு இனப் பற்று!

இங்குதான் நாம் மனதை மாற்றி போடகூடிய தமிழ் அருவி மணியனின் பேச்சில், "வறுமை என்னும் நெருப்பு நாலா பக்கமும் சூழந்த இருந்த போழுதும் பராசக்தியிடம் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று மகாகவி பாரதி பாடியது நினைவிற்கு வந்தது!" மகாகவி எங்கே, இந்த கவிபேரரசு எங்கே?!

அடுத்த நாள் விழாவில் தமிழ் உணர்வோடும், காந்திய சிந்தனைகளோடு பேசிய தமிழ் அருவி மணியனை பற்றியும் எளிமையாக எல்லோரும் ரசிக்கும் வண்ணம் புதுக்கவிதைகளை பற்றி பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் பற்றியும் நாளை எழுதுகிறேன்.....

நன்றிகள் பல எனது தமிழ்ச் சங்க பேரவைக்கு....

தோழமையுடன்

மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, July 08, 2009

தமிழ் விழா 2009 - Dr Ellyn Shander


சூலை 3, 2009.

இந்த விழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவர் மருத்துவர் Ellyn Shander. அடிப்படையில் இவர் ஒரு அமெரிக்க பெண் மருத்துவர். ஆனால் இவர் பணி நேரம் போக முழுக்க முழுக்க ஈழ தமிழர்களின் விடுதலைக்காக தன்னை அர்பணித்து கொண்டவர். இவர் ஒரு கள சமூக போராளி!

இவரின் பேச்சு உங்களை சிந்திக்க தூண்டும். இவரின் பேச்சு உங்களை தூங்க விடமால் செய்யும். ஆனால் இவர் ஒன்றும் பெரிய பேச்சாளர் அல்ல. இவரின் அனுபவம் நமக்கு நல்ல செய்திகளை தருகிறது. இவர் கிளி நொச்சி சென்று தமிழ் மக்களுக்கு சேவை செய்து இருக்கிறார். அது சம்மந்தமாக அங்கு தமிழர்கள் படும் துன்பங்களை, அவலங்களை பொறுமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம், மனதில் படும் வண்ணம் தன் கருத்துகளை வெளி படுத்துகிறார்.

ஈழ மக்கள் படும் துயரத்திற்கு சிங்கள ராணுவமும், சிங்கள அரசும் எப்படி பொறுப்பு என்பதை கணனி மூலம் வெண் திரையில் காண்பித்தார். நம் ஈழத்து உறவுகள் கம்பி வேலிக்குள் பெரிய மைதானத்தில் படும் துன்பங்களை சுட்டிக்காட்டி அவர்களின் இன மீட்பு போராட்டத்திற்கு நம் ஆதரவு ஏன் தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஒட்டு மொத்த அவையும் அமைதியாக அவரின் பேச்சை உள்வாங்கி கொண்டது.

ஈழ மக்கள் வாழுகின்ற நிலம் நமது நிலம், நமது மண், நமது சொத்து - அதனை மீட்டுடெடுப்பது நம் கனவு மட்டும் அல்ல, நமது உயர்ந்த லட்சியம் என்றார். உலக நாடுகளில் தனி நாடு கேட்டு பிரிந்து தனி நாடாக சில நாடுகள் இன்று இருப்பதற்கு காரணம், அவர்களின் தொடர் போராட்டம்தான், அது போல் நாமும் தொடர்ந்து போராட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்.

நமது இன பிரச்சினையை, நமது மொழிப் பிரச்சினையை, நமது பண்பாட்டை, நமது உரிமை மீட்டு எடுப்பை நம் இளைய தலைமுறைக்கு நாம் எடுத்து சொல்ல வேண்டியது நம் கடமை என்றார். நாளைய இளைஞர்கள் தான் நம் விடுதலையை மீட்டு எடுக்கப் போகும் வீரர்கள் என்றார்.

மிக நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகுதான் யூதர்கள் நாசிகளிடம் இருந்து அவர்கள் நாட்டை மீட்டு எடுத்தார்கள் அதைப் போல யூதர்களை கொன்ற ஹிட்லரைப் போல ராஜ்பக்சேவும் நம் தமிழர்களை கொன்ற வரலாற்றில் இடம் பெறுவான் என்றார்.

கடந்த மாதம் நடந்து முடிந்த இனப் போரில் நாம் தோற்றது போல ஒரு வடிவம் கிடைத்து இருக்கலாம், ஆனால் நமது எண்ணங்களும், நமது லட்சியங்களும் இந்த தோல்வியினால் பாதிக்காது. காரணம் நமது கொள்கை இதைவிட பெரிது என்றார். நம் மண்ணை நமது ஆக்கி கொள்ள நாம் கொள்கை பிடிப்புடன் தொடர்ந்து போராட வேண்டும் என்றார். இதுப் போல பல தோல்விகளை பல இயக்கங்கள் கண்டு அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கின்றன என்றார்.

தொடர்ந்து பேசிக் கொண்டு வருகையில் மொத்த கூட்டமும் அமைதியாக அவரின் பேச்சை கேட்டு கொண்டிருக்க, அடுத்து பெரிய வெண் திரையில் "வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்" (Next Year in Tamil Eelam) என்று சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் எழுந்து நின்று உணர்சி பெருமிதத்தோடு திரும்பி சொன்ன பொழுது ஆஹா அதனை என்னைவென்று சொல்வேன் எப்படி சொல்வேன்?!

ஒரு சராசரி தமிழனாக எல்லோருக்கும் இல்லாத உணர்ச்சி, ஒரு வெள்ளைக் கார பெண் மருத்துவருக்கு இருப்பதைப் பார்த்து பலர் நெகிழ்ந்தனர். ஈழத்திற்கு சென்று அங்கு மருத்துவ பணிவிடைகள் செய்து விட்டு முழு நேர பணியாக தன் உணர்வின் மூலம், தன் பேச்சின் மூலம், தன் அனுபவத்தின் மூலம் ஈழத்திற்கு குரல் கொடுக்கும் இந்த உன்னதப் பெண்மணிக்கு, இந்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையில் மேடை அமைத்து கொடுத்து அவரை பேச வைத்து ஒரு வரலாற்று மைல் கல்லை ஏற்படுத்தி விட்டார் பேரவைத் தலைவர் முனைவர் முத்துவேல் செல்லையா. இந்த அமைப்பு இன்னும் இதுப் போல பலரை அறிமுகப் படுத்தி இருக்கிறது, அறிமுக படுத்த வேண்டும்!

இதுப் போல பேச்சுகள் வருடம் ஒருமுறை கேட்டால் போதும், நம் உணர்வுகளை பட்டை தீட்டி கொள்ள ஏதுவாக இருக்கும். அதுவும் அவர் பொறுமையாக எளிமையான அழுகு ஆங்கிலத்தில்,

We will never be Silenced! And
We will never stop Fighting for Justice!

You will never kill the collective Tamil spirit!
We will Re Build Tamil Eelam!!!

We will not be defeated!
We have GOD on our side!!!

என்று சொல்ல சொல்ல அந்த வெள்ளைக்கார மருத்துவ பெண்மணியை பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் தொடர்ந்து கை தட்டி கொண்டே இருந்தனர் அவையில் இருந்த தமிழர்கள்!!!

சென்ற ஆண்டு புளோரிடாவில் பேரவை விழாவில் தன்னுடைய அருமையான நடனம் மூலம் தமிழ் உணர்வை ஊட்டிய அன்பு சகோதிரி நர்த்தகி நடராஜ் ஏனோ நினைவிற்கு வந்தார். நடனத்தின் இறுதியில் "இனம் காக்க மொழி காப்போம், மொழி காக்க கை கோர்போம்" என்று அவர் நடனம் ஆடி முடித்த பொழுது அரங்கத்தில் அனைவரும் எழுந்து நின்று கிட்டதட்ட 5 நிமிடங்கள் கைதட்டி கொண்டே இருந்தார்கள். அதைப் போல மருத்துவர் Ellyn Shanders பேசி முடித்த பொழுது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி கொண்டிருந்தார்கள். தமிழ் உணர்வையும், தமிழ் மக்கள் விடுதலைக்கு நாம் தொடர்ந்து போராட வேண்டியதன் அவசியத்தை அவர் பேசியதை கண்டு மனம் எண்ணில் அடங்கா உணர்ச்சிகளோடு இருந்த பொழுது,

அடுத்த பேச வந்த வைரமுத்துவை ஆர்வத்துடன் எதிர்பார்த்து நொந்து நூலான கதையை நாளை எழுதுகிறேன்.....

நன்றிகள் பல எனது தமிழ்ச் சங்க பேரவைக்கு....

தோழமையுடன்

மயிலாடுதுறை சிவா....


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 07, 2009

தமிழ் விழா 2009 - அட்லாண்டா, அமெரிக்கா


வாசிங்டன். சூலை 2009

கடந்த வாரம் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் தமிழ் விழா ஜார்ஜியா மாநிலத்தில் அடலாண்டா நகரில் சீரும் சிறப்போடும் நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தில் வரும் அமெரிக்க சுதந்திர தின விழா விடுமுறையில் நடக்கும் இந்தத் தமிழ் விழா ஓவ்வொரு வருடமும் வெவ்வேறு மாநிலத்தில் நடைபெறும். அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து கிட்டதட்ட 1000 முதல் 2000 தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டு அமெரிக்க மண்ணில் தமிழால் பேசி மகிழ்ந்து, சுவாசித்து, தமிழ் உணர்வோடு செல்லுவார்கள். இந்த உணர்வும், மகிழ்ச்சியும் ஒரு ஆண்டுக்கு நிச்சயம் தாங்கும்.


இந்த தமிழ் விழாவிற்கு கிட்டதட்ட 6 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுமட்டும் அல்ல குறைந்தது 50 குடும்பங்கள் இரவு பகல் பாராமல் இந்த விழாவை சிறப்பாக நடத்த தங்களை அர்பணித்து கொள்வார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் நல்லதொரு தலைப்பை விழா குழு தீர்மானிக்கும். இந்த ஆண்டு தமிழர் விழாவின் தலைப்பு "உணர்வு கொள்வோம், உரிமை காப்போம்"

இந்த தலைப்பிற்கு ஏற்ப தமிழ் மக்கள் உணர்வை மிகைப் படுத்தி கொள்வதற்கும், உரிமையை நிலை நாட்டுவதற்கும் ஏதுவாக விழா நிகழ்ச்சிகள் அமையும், பேச்சாளர்கள் பேசுவார்கள். இந்த இரண்டு நாட்கள் விழாவில் நடந்த / ரசித்த / வருத்தப்பட்ட வைத்த சில நிகழ்வுகளை உங்களுக்கு மீட்டுக் கொடுக்க ஆசைப் படுகிறேன்....

- விழாவின் சிறப்பு அம்சமாக அமெரிக்கப் பெண் மருத்துவர் Dr Ellen Sanders ஈழ விடுதலைக்கு நாம் போராட வேண்டிய அவசியத்தை பேச பேச அரங்கம் ஆர்பரித்ததையும், அவரின் பேச்சைக் கேட்ட சிலர் 'நான் இன்று மீண்டும் பிறந்தேன்' என்று சிலாகித்ததை எப்படி எழுத போகிறேன்?!
- தமிழ் அருவியாக தமிழ் உணர்வையும், ஈழ மக்களின் இன்றைய நிலமையையும், சிறந்த காந்தியவாதியாக பேசிய தமிழ் அருவி மணியனின் பேச்சை எப்படி நான் முழுமையாக மீட்டு எடுப்பேன்?! புறநானுற்றை அவர் ரசித்த விதம் அதனை மக்களுக்கு தேன் தடவிய பேச்சாக அளித்த விதம், அதனை அப்படியே எப்படி எழுத்தில் வடிக்கப் போகிறேன்?

- 80 வயதில் தமிழின் சிறப்பு அம்சமான சிலம்பின் சிறப்பைப் பேசிய சிலம்பொழி சு செல்லப்பனின் தமிழை எப்படி பாராட்டுவது?!

- எளிய நவீன கவிதைகளை மக்களுக்கு அறிமுகப் படுத்திய கவிஞர் ஜெய பாஸ்கரனின் கவிதைகளை எப்படி சிதறாமல் உங்கள் பார்வைக்கு வைக்கப் போகிறேன்?!

- கடமைக்காக போலியாகவும், கர்வமாகவும், சாதி உணர்வோடும் பேசிய வைரமுத்துவின் முகத்திரையை உங்கள் முன் கிழித்தெறிய வேண்டும்.

- நாடுகடந்த தமிழீத்தை நாம் ஏன் அங்கீரக்க வேண்டும் என்று நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நண்பர்களை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்...

- "சந்திராயன்" ராக்கெட்டில் தமிழன் ஜெயித்ததை, எளிமையாக தமிழில் உரையாடிய திரு மயில்சாமி அண்ணாதுரையை பற்றி உங்களுக்கு சொல்லியாக வேண்டும்...

- இதை தவிர நடிகர் ஜீவா, நடிகர் பசுபதி, நடிகை ஜெயஸ்ரீ, கன்னிகா - இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எவ்வளவு தேடினாலும் எனக்கு எதுவும் தெரியவில்லை!!!

இது ஒரு அறிமுகம் தான். இன்று முதல் தினம் ஒரு பதிவு விழாவைப் பற்றி.....

மொத்ததில் தமிழர் விழா மிக அருமை, மிக சிறப்பு, தமிழ் ஆர்வத்தையும், தமிழ் உணர்வையும் ஏற்படுத்திய இந்த அமைப்பு மேலும் மேலும் வளர வேண்டும்...


நன்றிகள் பல...


தோழமையுடன்


மயிலாடுதுறை சிவா....


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது