தமிழ் விழா 2009 - வைரமுத்தும் சாதிப் பற்றும்
சூலை 4, 2009.
இந்த விழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவர் மருத்துவர் Ellyn Shander என்றால் இவருக்கு நேர் எதிராக ஒருவர் சொதப்பினார் என்றால் அவர்தாம் நம் வைரமுத்து. இவருடைய பல பாடல்கள் நம் மனதிற்கு மிக மிக நெருக்கமாக இருந்தாலும், இவரிடம் உள்ள கர்வம் இந்த முறை என்னை மிக மிக வெறுப்பு அடைய செய்தது. இவர் மிகப் பெரிய படைப்பாளி என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
ஒவ்வோரு ஆண்டும் பேரவை மிகப் பெரிய தமிழ் அறிஞர்களை, ஏழ்மைநிலையில் இருந்தாலும் அவர்களையும் கூப்பிட்டு பேரவை அவர்களை கெளரவ படுத்தும். இந்த முறை பேரவை விழாவிற்கு நமது விழா குழு இவரை அழைக்கவில்லை. அதாவது நாம் செலவு செய்து அவரை கூப்பிடவில்லை. இந்த விழாவிற்கு பெரும் பணம் உதவி செய்த நபர் வைரமுத்துவை கூப்பிட ஆசைப் பட்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் பேரவை விழாவில் என்ன பேசினாரோ அதில் பாதி சதவீதம் அதனை அப்படியே பேசினார் என்றால் மிகையல்ல. அதுமட்டும் அல்ல இவர் அலட்டிய விதம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. விழா முதல் நாள் மாலை பேச அழைத்தோம். அவர் மறுத்துவிட்டார். ஒருமுறைதான் பேசுவேன் என்றும் அதுவும் விழாவின் இரண்டாம் நாள்தான் பேசுவேன் என்று அடம் பிடித்தார். அதுமட்டும் அல்ல அவர் வந்து பேச போவதை பலமுறை ஒலி பெருக்கியில் அறிவிக்க வேண்டுமாம்...என்ன கொடுமை சார் இது....!!!இவர் பார்க்காத பணமா? நம் தங்க தமிழ்நாட்டில் ஒரு கவிஞர் கோடிஸ்வரன் இருக்கிறார் என்றால் அது இவர்தான்....ஆனால் இன்னும் அந்த கர்வமும் அலட்டலும் குறையவில்லை! இவர் அடைந்த புகழுக்கு பின் இவர் இன்னும் மனபக்குவம் அடையவில்லை என்று தோன்றியது.
என் மனதை வருத்த படவைத்த விதம் என்றால், நம் இளைய தலைமுறைக்கு ஒன்று இரண்டு மூன்று நான்கு என்று சொல்லி கொடுக்கும் பொழுது அப்படியே தமிழையும் சேர்த்துக் கற்று கொடுங்கள் என்றார். அதாவது ஒரே குலம் மனித குலம், சாதி இரண்டு ஆண் மற்றும் பெண், தமிழ் மூன்று இயல், இசை, நாடகம், திசைகள் நான்கு, இப்படி சொல்லிக் கொண்டே போனார்.
வழக்கம்போல் நானும் தமிழும், என் தமிழ், அப்படி இப்படி என்று கர்வமாக பேசிவிட்டு, இந்த விழாவின் சிறப்பு அம்சம் "அண்ணா நூற்றாண்டு" அதற்காக விழா மலரில் அவரின் புகைப் படமும் அவரைப் பற்றிய கட்டுரையும் வந்துள்ளது என்று பாராட்டிவிட்டு, ஆனால் ஒன்றை மறந்துவிட்டீர்கள் என்றார். தேவர் திருமகனாரின் புகைப் படமோ அல்லது அவரைப் பற்றிய கட்டுரையோ இதில் இல்லை என்று வருத்தப் பட்டார். இந்த ஆண்டு தேவருக்கு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றார். தேவரின் பெருமைகளை பட்டியல் இட்டார். தேவரின் முழு பெயரை கூட அவர் உச்சரிக்கவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கம் என்று சொல்லவே இல்லை. தேவர் திருமகனார் என்று பெருமை பட்டு கொண்டார். தேவரின் முடி, அவர் நடந்து சென்றால் பட்டு கம்பளம் அது இது என்று அடுக்கி கொண்டே போனார். இவரின் சாதிப்பற்று அப்பட்டமாக தெரிந்தது.
வைரமுத்து தன்னுடைய முன்னுரையில் சாதி இரண்டு, அதாவது ஆண் சாதி மற்றும் பெண் சாதி என்று சொல்லி விட்டு, இப்பொழுது என்ன தீடீர் தேவர் பாசம்? வைரமுத்து மிகுந்த சாதிப் பற்று உடையவர் என்று நன்கு தெரிந்தாலும் விழாவில் தேவரின் பெருமைகளை அதுவும் கடல் கடந்து பேசியது மிக மிக நெருடலாக இருந்தது.
இதைவிட கொடுமை என்னவென்றால் பேச்சின் கடைசியில் ஈழ தமிழர்கள் பற்றி நான் பேசாமல் இருந்துவிட்டால் நான் தமிழனே அல்ல என்று பேசிவிட்டு கைதட்டல் வாங்கி கொண்டார். வருகிற வாரம் அவரின் பிறந்த தினமாம், அதை கவிஞர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கமாம்! இந்த முறை அதனை கொண்டாடவில்லையாம்! காரணம் ஈழ தமிழர்கள் அங்கே கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் சமயத்தில் நான் பிறந்த தினம் கொண்டாடுவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன் என்றார். என்னே ஒரு தியாகம்! என்னே ஒரு இனப் பற்று!
இங்குதான் நாம் மனதை மாற்றி போடகூடிய தமிழ் அருவி மணியனின் பேச்சில், "வறுமை என்னும் நெருப்பு நாலா பக்கமும் சூழந்த இருந்த போழுதும் பராசக்தியிடம் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று மகாகவி பாரதி பாடியது நினைவிற்கு வந்தது!" மகாகவி எங்கே, இந்த கவிபேரரசு எங்கே?!
அடுத்த நாள் விழாவில் தமிழ் உணர்வோடும், காந்திய சிந்தனைகளோடு பேசிய தமிழ் அருவி மணியனை பற்றியும் எளிமையாக எல்லோரும் ரசிக்கும் வண்ணம் புதுக்கவிதைகளை பற்றி பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் பற்றியும் நாளை எழுதுகிறேன்.....
நன்றிகள் பல எனது தமிழ்ச் சங்க பேரவைக்கு....
தோழமையுடன்
மயிலாடுதுறை சிவா....