போராளி அய்யா நெடுமாறனுக்கு ஓர் கடிதம்
வாசிங்டன்
ஆக் 28 2008
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அய்யாவிற்கு
இன்னும் உங்கள் மீது ஓரளவு மரியாதை வைத்து இருக்கும் உலகத் தமிழன் சார்பாக உங்களுடன் ஓரிரு வார்த்தைகள்...
கடந்த ஒரு வார காலமாக உங்களது தினமணி அறிக்கையும், அதனை தொடர்ந்து கலைஞரின் கவிதையும் அதற்கு பதிலுக்கு ஓர் மறுப்பு கடிதமும் நீங்கள் வெளியிட்டதை பார்க்கும் பொழுது சராசரி தமிழனாக மனம் ரொம்ப வருத்தம் அடைகிறது!
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் தொடர்ந்து கலைஞரை சீண்டுவதன் உள்நோக்கந்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பலன்?! உங்களும் கலைஞருக்கும் அப்படி என்னதான் தனிப்பட்ட பிரச்சினை?! உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், உங்களுக்கு கலைஞரின் மீது அப்படி என்ன தீராத கோபம் மற்றும் வெறுப்பு?! அரசியலுக்கு அப்பாற்பட்டு நீங்கள் கலைஞர் மீது ஓர் வெறுப்பை வைத்துள்ளதன் மர்மம்தான் என்ன?!
ஈழ மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் உங்களை கிட்டதட்ட 18 மாதங்கள் சிறையில் தள்ளிய ஜெயலலிதாவை நீங்கள் கலைஞரைப் போல இப்படி விமர்சித்து உண்டா? அந்த அடக்குமுறை ஆட்சிதமிழர்களுக்கு எதிரான ஆட்சி மீண்டும் வந்துவிட கூடாது என்று நீங்கள் போரடியது உண்டா?! இந்தஅரசியல் களத்தில் நமக்கு யார் வேண்டும், யார் வேண்டாம் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை!
கலைஞரிடம் உங்களுக்கு பிடிக்காத எவ்வளவோ விசயங்கள் இருக்கலாம்? ஆனால் அவருக்கு ஈழ மக்களின் மீது அன்பும், மரியாதையும், அவர்கள் படுகின்ற துன்பங்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத நபர் என்றுநினைக்கிறீர்களா? அல்லது கலைஞரை அப்படி ஒதுக்கி விட முடியுமா? அப்படி என்றால் தமிழ்ச் செல்வன் மறைவிற்கு அவர் இரங்கல் தெரிவித்ததை இன்றுவரை நீங்கள் மனதார பாராட்டவில்லையே?! ஏன்?!
நீங்கள் மிகப் பெரிய அரசியல் தலைவரும் அல்ல! உங்களுக்கு என்று பெரிதான எந்த வாக்கு வங்கியும் இல்லை! பிறகு எதற்கு கலைஞருடன் ஓர் எதிர் கட்சி தலைவர் போல் நீங்கள் நடந்து கொள்கீறீர்கள்?
நீங்கள் ஓர் மக்கள் போராளி! குறிப்பாக இனம், மொழி என்று உங்களுக்கு என்று ஓர் பாதையை வகுத்துக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு ஈழப் பிரச்சினை மிக முக்கியம்! இந்த பாதையில் நீங்கள் தொடர்ந்து போராடி கொண்டு வருவதை தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அறிவார்கள்! உங்களுக்கு என்று இனி இழப்பதற்கு என்று எதுவும் இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்!
ஆனால் கலைஞருக்கு?! கலைஞர் ஈழ தமிழர்களின் வெற்றிக்கு மிகப் பெரிய போராட்டமோ அல்லது நீங்கள் எதிர்பார்க்கின்ற மிகப் பெரிய உதவிகளோ செய்யமால் இருந்து இருக்கலாம்! ஆனால் அவர் இழந்த இழப்புகள் எவ்வளவோ?! விடுதலைப் புலிகள் நடமாட்டம், தொடர்பு என்று கலைஞரின் ஆட்சியை கலைத்ததைநாடு அறியுமே?! அதுமட்டுமா? திமுக மற்றும் திக பல பிரபலங்கள் இதனால் தொடர்ந்து விசாரணைக்கு உட்பட்டார்களே?! இன்னமும் தொடர்ந்து மிரட்டல்கள்! இவற்றிக்கு அப்பாற்பட்டு கலைஞர் ஈழ மக்களின் விடுதலையை ஆதரிக்கவில்லையா? அவருக்கு என்று ஓர் எல்லை உண்டு! காரணம் அவர் மிகப் பெரிய அரசு பதவியில் இருப்பவர். மிகப் பெரிய இயக்கத்தின் தலைவன்! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாம் ஓர் இரவில் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் உணர வாய்ப்பில்லை!
உங்களது இயக்கத்தில் நல்லப் பேச்சாளர் ஆன மற்றோரு போராளி சுப வீரபாண்டியன் கூட உங்களின் கருத்துகளோடு மாறுப்பட்டு கலைஞர் ஆட்சி வேண்டும் என்று ஊர் ஊராக சென்று கலைஞரை ஆதரித்தார். கலைஞர் ஆட்சிக்குவந்தப் பிறகு உங்கள் தனிப்பட்ட விருப்பு வெருப்புகளுக்கு அப்பாற்பட்டு அவரை இன்றுவரை நீங்கள் வாழ்த்தவில்லை மற்றும் பாராட்டவில்லை! வயது காரணமாகவும், மரியாதை நிமித்தம் காரணமாகவும் கலைஞரை நீங்கள் ஓரு முறை நேரில் பாராட்டி இருந்தால், இப்படி ஓர் மனகசப்பு பெருகி இருக்காதே?! உங்களின் இத்தனை வயது அனுபவம் அதற்கு உதவவில்லையே?!
நீங்கள் உண்மையிலேயே ஈழ மக்களின் விடுதலைதான் முக்கியம், நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு முக்கியம் அல்ல என்று நினைத்து இருந்தால், கலைஞரிடம் ஓரளவு நட்பு பாராட்டி பல காரியங்களை சாதித்து இருக்கலாமே?!அவருக்கும் வயது கிட்டதட்ட 85, உங்களுக்கும் வயது கிட்டதட்ட 70, உங்கள் நட்பால் பல நல்ல காரியங்களை தமிழ்நாட்டிலும், ஈழ மக்களிடத்தும் செய்து இருக்கலாம்! என்ன செய்வது உங்களது ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை!
உங்களது இந்த ஈகோவால் நீங்கள் தொடர்ந்து தினமணியில் கலைஞரை திட்டி அறிக்கை விடுங்கள்! அவரும் பதிலுக்கு தொடர்ந்து கவிதை எழுதட்டும்! இதனால் பாதிப்பு யாருக்கு?! மகிழ்ச்சி யாருக்கு?! என்பதை நீங்களும் ஒரளவு அறிந்து இருப்பீர்கள்! கலைஞரை தினமும் தாக்குவது முக்கியமா? அல்லது உங்களது ஈழ மக்கள் விடுதலை போராட்டம் முக்கியமா?! என்பதை நீங்கள் முடிவு செய்தால் நல்லது?!
வருத்ததுடன்
மயிலாடுதுறை சிவா...