என்று அணையும் இந்த சா(தீ)யம் !!!
தாழ்த்த பட்ட மக்களுக்கு போராடும் எழுச்சி தலைவன் தொல். திருமா சிங்கப்பூர் பயணத்தை மிக சாதரணமாக நான் என் வலைப் பூவில் பதிய வைத்தேன். காரணம் சிங்கப்பூரில் உள்ள இளைஞர்கள் அவரிடம் ஓர் கலந்து உரையாடட்டுமே என்ற நல்ல எண்ணத்தில்.
அதில் ஓர் நண்பர் கூப்பிட்டு நீங்கள் திருமாவின் உதவியாளாரா? மற்றோருவர் நீங்கள் திருமாவின் விடுதலை சிறுத்தையை சார்ந்தவாரா? இன்னோரு நண்பர் உங்களுக்கு ஏன் இந்த வேலை என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு தெரிந்த செய்தியை வலைப் பூக்கள் மக்களிடம் பகிர்ந்துக் கொண்டது தவறா? பரவாயில்லை.
எல்லாவற்றிக்கும் முத்தாய்பாக நண்பர் ரஜினி ராம்கி சில கேள்விகளை முன் வைத்தார். அவற்றிக்கு நேரிடையான என் பதிலையும் என் சில கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்வது என் கடமை.
ராம்கியின் கேள்விகள்
வைகோ, இராமதாசு, திருமா உலகம் பூரா சுற்றி வந்து என்னதான் செய்கிறார்கள்?இவர்களை வரவேற்பது யார்? சொந்த காசில் வருகிறார்களா? சம்பந்தப் பட்ட நாடுகளில் தாழ்த்தப் பட்டவர் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்காவா? வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலனோர் மேல் ஆதிக்க சாதியனர்தான், திருமாவளவன் போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
என்னுடைய விளக்கம்
வைகோ, இராமதாசு இவர்கள் சில சமயம் சொந்த காசிலும், சில சமயம் தமிழ் அமைப்புகள் மூலமும் வருகிறார்கள். வைகோவின் மகள் சிகாகோவில் இருக்கிறார், அவரை பார்ப்பதற்கு அவர் தான் சொந்த காசில்தான் வருகிறார். ஒருமுறை வைகோவை அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்பு அழைத்துக் கொண்டது.
இராமதாசு அமெரிக்கா வந்தாரா என்று தெரியவில்லை. ஒரு முறை தமிழ் அமைப்பு அவரை அழைக்க முயற்சி செய்தது. அவர் அப்போழுதுதான் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வந்ததால் அவரால் வர முடியவில்லை.
எனக்கு தெரிந்து திருமா சொந்த காசில் வந்தது இல்லை. அமெரிக்கா, கனடா, லண்டன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் சார்பாகதான் அவர் அழைக்கப் பட்டார்.
என் மனதை பாதித்த கேள்வி, "வெளி நாடுகளில் தமிழர்கள் பெரும்பாலனோர் மேலாதிக்க சாதியனர்தான், திருமாவளவன் போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?"
அது எப்படி ராம்கி நீங்கள் அப்படி நினைக்கலாம்? இது தவறான சிந்தனை அல்லாவா? எனக்கு தெரிந்த பல தாழ்த்தபட்ட, பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்த பட்ட ஏராளமான நபர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் எண்ணற்ற பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வெளிநாடுகள் சென்று சமுதாயத்தில் அவர்களும் முன்னேறி நன்கு வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல அவர்கள் தன்னுடைய நண்பர்களுக்கும் உதவி செய்கிறார்கள் வெளிநாடு வருவதற்கும் மேற்கொண்டு படிப்பதற்கும். எனக்கு தெரிந்த மேல் சாதியனர் பலர் சுயநலமாக தான் தன் குடும்பம், தன் இனம் முக்கியம் என்று நடந்துக் கொள்வதை பார்த்து இருக்கிறேன்.
திருமாவளவன் போன்றோருக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?
இந்த கேள்வியின் உண்மையான அர்த்தம் என்ன ராம்கி? திருமா என்றால் இளக்காராமா? திருமா தலித் என்பதால் மக்கள் அவர்களை மதிக்கிறார்களா? என்று தானே நீங்கள் கேட்கிறீர்கள்?
கிராமத்தில் ஜாதி வெறி பிடித்து அலைவோர், வீச்சரிவாளும் வேல் கம்பும் வைத்து நையப்புடைப்போர், மலம் தின்ன வைப்போர் மற்றும் அவர் சந்ததியினர் கூட படித்து, பட்டம் பெற்று, பலதரப்பட்ட மக்களோடு பழகிய பின் தங்களுடைய ஜாதி வெறியை , அதன் அசிங்கத்தை விட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் நம் மக்களில் ஒரு சிலர் என்னதான் படித்தாலும், எத்தனை இலக்கியப் பயின்றாலும், எத்தனை நாடுதான் போனாலும், தலித் மக்களை கீழானவர்களாக, கேவலப்பட்டவர்களாக பார்க்கும் இம் மாதிரி மனநிலை என்றுதான் மாறுமோ என காத்திருக்கிறேன்.
உண்மையை சொல்லப் போனால் திருமா போன்ற தலைவர்களுக்கு நல்ல மரியாதை வெளிநாட்டு வாழ் மத்தியில் இருக்கிறது. அதுவும் குறிப்பாக சாதி, மதம் பார்க்காத, படித்தவர்கள் மத்தியில், தமிழ் ஆர்வம் மிக்க, தமிழ் உணர்வாளர்களிடையே பெருத்த மரியாதையையும், பாசமும், அன்பும், நேசமும் திருமா மீது உள்ளது. நம்புங்கள்!
நீங்கள் சொல்லும் மேல் சாதியனர் பலர் இன்னமும், வெளிநாடுகள் வந்துவிட்ட பொழுதும் தன் சாதியை பலமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளார்கள். (எடுத்து காட்டு - பிராமணர்கள், செட்டியார்கள், கவுண்டர்கள், நாடார்கள்). அதைவிட வெட்க கேடு இந்த சாதியை சார்ந்தவர்கள் சாதி அமைப்பு ரீதியாகவும் கூடுகிறார்கள் என்பது.
அதே போல் உயர் சாதியனர் பலரும் எஸ்வி சேகர், கிரேசி மோகன், மாதவன், பம்பாய் ஜெயஸ்ரீ, பம்பாய் சகோதிரிகள், ஹரிஹரன், உன்னி கிருஸ்ணன் இப்படிப் பட்ட மக்களுக்குதான் அதிக ஆர்வத்தை காட்டுகிறார்கள்.
நடப்பு என்னவெனில், அரசியல் ஆர்வமும், தமிழ் ஆர்வமும், இன உணர்வும் மிக்க பலரும் வைகோ, இராமதாசு, திருமா மீது நம்பிக்கை வைத்து உள்ளார்கள். அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அனால் எல்லாவற்றிக்கும் மேலாக ஈழ மக்கள் படும் வேதனைகளை, துயரங்களை, அவலங்களை மக்கள் இடையே பேசும், தமிழ் மொழிக்காக போராடும், மக்கள் பிரச்சினைக்காக போராடும் தலைவர்களை சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மனதார பாராட்டதான் செய்கிறார்கள். இப்படி பட்ட கருத்துகளோடு ஒத்து போகும் தலைவர்களை உணர்வு பூர்வமான தமிழ் அமைப்புகள் இந்த தலைவர்களை கூப்பிட்டு அவர்களை ஊக்கப் படுத்துகிறது, இனியும் இந்த ஊக்கம் தொடரும்.
நீங்கள் இப்படி கேட்டது போல அத்வானி, நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோசி, இல.கணேசன், சேசன், சு.சுவாமி போன்றவர்கள் ஏன் வெளிநாடு செல்லுகிறார்கள் என்று கேட்டது உண்டா? யாரும் கேட்பதும் இல்லை. டாக்காவுக்கு போனாரே; சீனாவுக்கு போக வேண்டுமென்று மனுப்போட்டாரே, இருள்நீக்கி சுப்பிரமணியன், அவர்கள் எல்லாம் எதற்காகப் போகிறார்கள்?
பின் பின் ஏன் இவர்களுக்கு மட்டும் இந்த கேள்வி..?? கேட்பதானால் எல்லாரிடத்தும் கேளுங்கள். தலித் தோழர்களை விட்டு விடுவோம். அவர்களை அணைத்துக் கொள்வோம் வாருங்கள். அல்லது தவறான கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருப்போம். அவர்கள் சாதீயச்சுனாமியால் காயப்பட்டவர்கள். கை கொடுப்போம் வாருங்கள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...