காரைக்கால் தாய் தமிழ் பள்ளி
காரைக்கால், பிப். 07 2007
இந்த முறை தமிழகம் சென்று இருந்த பொழுது மீண்டும் காரைக்கால் தாய் தமிழ்ப் பள்ளி சென்று வர வாய்ப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு முறை தமிழகம் செல்லும் பொழுதும் தாய் தமிழ்ப் பள்ளிகளை பார்ப்பதில் ஓர் எல்லையில்லா ஆனந்தம்.
மயிலாடுதுறையில் இருந்து கிட்டதட்ட 35 கிலோ மீட்டரில் உள்ள ஓர் சிறிய நகரம் காரைக்கால். மிக அழகான இன்னும் மாசு நிறைய அடையமால் உள்ள ஊர்களில் காரைக்காலும் ஒன்று. இந்த ஊர் பாண்டி அரசின் ஆளுமையில் உள்ள ஊர். மாலை வேளைகளில் கடல் காற்று மனதிற்கு இதமாக இருக்கும். காரைக்காலுக்கு என்று பல பெருமையான விசயங்கள் இருந்தாலும், இந்த பள்ளியால் காரைக்காலுக்கு மேலும் பல பெருமைகள் வர கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
எனது சகோதிரி மூலம் அந்த பள்ளியைப் பற்றி தெரிய வந்தது. இந்த பள்ளி ஆரம்பித்து கிட்டதட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த பள்ளியை ஓர் பெண் மருத்துவரும் அவரது கணவர் வழக்குரைஞரும் இந்த பள்ளியை ஓர் சீரான முறையில் நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியில் கிட்டதட்ட 225 குழந்தைகள் படிக்கிறார்கள். அதில் மிகவும் குறிப்பிடும்படியான விசயம் என்னவென்றால் பாதிக்கும் மேலான குழந்தைகள் சேரிவாழ் குழந்தைகள். அந்த குழந்தைகள் அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழே மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் சிரமப் படுகிற குழந்தைகள் படிக்கிறார்கள்.
இந்த தாய் தமிழ் பள்ளியில் நிறைய சிறப்புகள் உள்ளன. குழந்தைகள் அழகு தமிழில் நன்கு உரையாடுகிறார்கள். ஆங்கிலமும் படிக்கிறார்கள். ஆனால் அனைத்து பாடங்களையும் தாய் மொழியில் படிப்பதால் அவர்களால் அனைத்து பாடங்களையும் நன்கு உணர்ந்து புரிந்து படிக்க உதவியாக உள்ளது. LKG / UKG வகுப்புகளை மொட்டு / மலர் வகுப்புகள் என்கிறார்கள். குழந்தைகள் அனைவரும் மிக அன்போடும் பண்போடும் பாசத்தோடும் பழகுவது மனதிற்கு இனிமையான அனுபவமாக உள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. வேறு சில பள்ளிகளில் நல்ல வேலையும் மற்றும் சம்பளமும் கிடைத்தாலும் இந்த பள்ளியில் பாடம் கற்பிப்பது ஓர் உன்னத சேவையாக உள்ளது என்றார்கள். இன்னும் சில நாட்களில் அந்தப் பள்ளியில் "ஆண்டு விழா" நடைப் பெற உள்ளது. அதற்காக குழந்தைகள் தமிழனின் பாரம்பரிய இசையான தாரை, தப்பட்டை, பறை, ஒயிலாட்டம், கோலாட்டம், நாதஸ்வர மற்றும் தவில் இசையோடு கற்றுக் கொண்டு வருகிறார்கள்.
இந்த பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு காரைக்கால் வாழ் மக்கள் அன்போடு பொருளாதார உதவிகள் செய்து வருகிறார்கள். அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவருடைய சொந்த இடத்தை மிக நியாயமான விலைக்கு பள்ளி கூடம் கட்ட இடத்தை கொடுத்து உள்ளார். ரோட்டரி மற்றும் லயன்ஸ் சங்கங்களும் ஓரளவு உதவிகளை செய்து வருகிறார்கள். ஓரு சில வெளிநாட்டு தமிழர்களும் உதவுகிறார்கள். நியுசெர்சி வாழ் தமிழர்
ஓருவர் கிட்டதட்ட ரூபாய் 10 லட்சம் கொடுத்து பள்ளிகூடம் அமைய மிகப் பெரிய பொருளாதார உதவிகள் தொடந்து செய்து வருகிறார்.
கல்வி வியாபாரம் ஆகிவிட்ட இந்த காலத்தில், வாழுகின்ற இந்த காலத்தில் ஓர் தன்னலம் அற்ற, சேரி வாழ் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதும், நம் தமிழ் மொழியை எளிமையான முறையில் கற்பித்து அவர்களை சமுதாயத்தில் ஓர் உணர்வாளர்களாக, தமிழ் ஆர்வலவர்களாக, தமிழ் சமுதாய காவலர்களாக, சமுதாய நோக்கோடு அவர்களை உருவாக்குவது மனதிற்கு எல்லை இல்லா இன்பத்தை தருகிறது. இந்த பள்ளியில் படிக்கின்ற குழந்தைகள் அனைவருக்கும் ஓர் வளமையான எதிர்காலம் அமையட்டும்.
பள்ளியை பார்த்துவிட்டு அனைவரிடமும் விடைப் பெற்று கிளம்பிய பொழுது, ஓரிரு குழந்தைகள் ஓடி வந்து "வெற்றி நிச்சயம், நன்றி அய்யா" என்று சொன்ன பொழுது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை...
மேலும் தொடர்புகளுக்கு " திருவள்ளூவர் தாய் தமிழ்ப் பள்ளி, காரைக்கால்" என்ற முகவரியில் அணுகவும்.
வாழ்க தமிழ் ! வளர்க அதன் புகழ்!
மயிலாடுதுறை சிவா...