இயக்குனர் சேரனா இப்படி?
வாசிங்டன் சூலை 22, 2008
தமிழ் சினிமாவில் ஓரளவு தரமான திரை காவியங்களை கொடுத்த சேரன், மாய கண்ணாடி தோல்விக்குபிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு "பொக்கிஷம்" என்ற திரைப் படத்தை எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே!
இந்த திரைப் படத்திற்கு அவரின் மிக அருமையான படமான ஆட்டோகிராப் நாயகிகள் சினேகா, கோபிகா, மல்லிகா இவர்களிடம் இந்த புதுப் படத்திற்கு அணுகி அவர்கள் மறுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்தாலும், அவருடைய மற்றோரு நல்ல திரைப் படத்தில் தவமாய் தவமிருந்து நாயகி பத்மப்ரியாவை அவர் தன்னுடைய பொக்கிஷத்தில் நடிக்க வைத்து வருகிறார்.
இந்த திரைப் படத்திற்கு அவர் முதலில் ப்ரியாமணியை அணுகியதாகவும், அவர் மறுப்புத் தெரிவித்து விட்டாதாகவும் சேரனே சொல்லுகிறார். மேலும் அவர் ப்ரியாமணியை சிறிதும் நாகரீகம் இல்லாமல் தரக் குறைவாக திட்டுகிறார். வயதுக்கு மீறிய புகழ் வந்துவிட்டது என்கிறார். புகழுக்கும் வயதிற்கும் என்ன சம்மந்தம்? சேரன் ப்ரியாமணியை முதன் முதலில் நடிக்க கூப்பிட்டதான் காரணம் என்ன? ஓரளவு இவர் நடிப்பார் என்பதும் தம் படத்திற்கு இவரை நடிக்க வைத்தால் மார்கெட் நன்கு இருக்கும் என்று நினைத்து காரணத்தால் சேரன் அணுகி இருக்கிறார். ப்ரியாமணி மறுத்து இருக்கிறார். உடனே சேரனுக்கு கோபம் தலைக்கேறிவிட்டது!
இவருடைய படத்தில் நடிக்க வரவில்லை என்பதாலயே ப்ரியமணியை இப்படி பேசுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?! இதுவே இவர் படத்தில் நடிக்க சம்மதித்து இருந்தால் இவர் இப்படி பேசி இருப்பாரா? அல்லது என் படத்தில் சிறிய வயதிலேயே தேசிய விருது வாங்கிய நடிகையை நடிக்க வைத்து இருக்கிறேன் என்று பெருமையாக பேசி இருப்பாரோ?!
ப்ரியாமணிக்கு யார் படத்தில் நடிக்க வேண்டும், யார் படத்தில் கூடாது என்ற முடிவை எடுக்க முழு உரிமை மற்றும் சுதந்திரம் உண்டு! அதில் தலையிட இயக்குனர் சேரனுக்கு என்ன உரிமை இருக்கிறது?!

இந்த சிறிய வயதில் வாங்கிய தேசிய விருது அவரின் "பருத்தி வீரன்" நடித்ததிற்கு அதற்கான உழைப்பிற்கு கிடைத்த பலன். இதனை சேரன் கொச்சைப் படுத்தி பேசியது கண்டிக்க தக்கது!
நல்ல தரமான படங்களை கொடுத்த சேரன், மாயகண்ணாடி மூலம் தோல்வியை தழுவினார். ஆனால் அவரால் மீண்டும் ஓர் நல்ல திரைப் படத்தைதரமுடியும் என்று நிச்சயம் நம்புகிறேன். போக்கிஷம் வெற்றி மூலம் ப்ரியாமணியை நீங்கள் வருத்தப் பட வைக்க முடியும். ஆஹா இப்படிப்பட்ட அருமையான திரைப் படத்தில் நாம் நடிக்காமல் போய்விட்டமே என்று?!
அதேப் போல் பொக்கிஷம் வெற்றிப் பெற வேண்டும், அதுவரை அவர் அமைதியாக இருப்பது அவருக்குநலம்!
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
(ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்)
இன்சொல் இனிதீன்றல் காண்பான்
எவன்கொலோவன்சொல் வழங்குவது.
(இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?)
நன்றி!
மயிலாடுதுறை சிவா...